tamil blog லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil blog லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 29, 2010

வேர்களுக்கு வயது ஒன்று ! ( 2009 டிசம்பர் 29 ஆம் நாள் )

 வணக்கம் !
சென்ற வருடம் இதே மாதம் இதே நாள்தான் வலைப்பூ வேர்கள் பிறந்தது. முதலாண்டை முழுமையாக நிறைவு செய்து இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 
ஒரு கணம் என் நினைவுகளை பின்னோக்கி செலுத்துகிறேன் . சின்னஞ்சிறு வயதில் எழுத்து ஓவியம் போன்ற கலைகளில் பெரிதும் ஈர்ப்பு இருந்த போதிலும் கடந்த  30  ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியப்பணியில் மின்அணுவியலில் துறையில் மிகுந்த ஈடுபாடு கொள்ள நேரிட்டது. அரசுப் பணியிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்று தனித்து நின்ற போது என் மொழி எனக்காக காத்திருப்பதைக் காண நேரிட்டது. அதன் விளைவு வேர்கள் எனக்குத் துணையாயிற்று.
கடந்து போன காலங்களில் நெஞ்சில் நிலைத்து நின்ற நினைவுகளையும் நிகழ் காலங்களில் சந்திக்க நேர்ந்த தருணங்களையும் வருங்கால தொலை நோக்கு பார்வைகளையும் ஒரு சிலருடனாவது வேர்கள் மூலம் பகிர்ந்து கொள்ளவே விரும்பினேன்.
இந்த ஒரு வருட காலத்தில் எனக்கிருந்த கடமைகளுக்கிடையேயும் அவ்வப்போது குறுக்கிடுகிற பயணங்களுக்கிடையேயும் ஏறத்தாழ 36 இடுகைகளை பதிவு செய்திருக்கிறேன்.    கணினித் துறையில் போதுமான பயிறசியின்மையும் மொழியை விட்டு நெடுங்காலம் விலகியிருந்ததாலும் வேர்களை வடிவமைத்தலிலும் எழுத்தில் பிழைகளைத் தவிற்பதிலும் மிகுந்த சிறமத்தை சந்திக்க நேர்ந்தது.    மிகுதியான காலத்தையும் விரயம் செய்ய வேண்டியிருந்தது.
முதன்முதலாக இடுகைகளை பதிவிடும் போது இந்த பரந்த விரிந்து கிடக்கும் இணையத்தில் எத்தனை பேர் இந்த நீட்டோலையை திரும்பிப்பார்க்கப்போகிறார்கள் என்பதில் மிகுந்த அய்யம் இருந்ததென்னவோ உண்மை. இருந்த போதிலும் வேர்களின் எழுச்சி இந்த கோளத்தின் சகல இடுக்கிகளிலிருந்தும் எட்டிப் பார்க்கப்படுகிறது என்று அறியும் போது மிகுந்த பெரிமிதமும் ஊக்கமும் பெருகிறேன். அனைத்து தேசங்களுக்கும் புலம் பெயர்ந்த என் மொழிச் செல்வங்களுக்கும் இந்த மண்ணில் மொழிக்கு உரமாக இருப்போருக்கும் என் மகிழ்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
தங்களுக்கேற்படும் எண்ண எதிரொலிகளை
(என் நிலையாகிலும் ) அருள்கூர்ந்து மறுமொழிமூலம் வெளிப்படுத்தி வேர்களின் வளற்சியில் துணை நில்லுங்கள் !
இந்த இரண்டாம் ஆண்டு துவக்கத்தில் இன்னொரு மகிழ்வான செய்தியும் காத்திருக்கிறது.மிகுதியாக கேளிக்கை நிறைந்த வலைப்பூக்களுக்கிடையே
tamil 10 top sites தளத்தின் கண்மணிகள் வேர்கள் வலைப்பூவை முதல் இடத்துக்கு தூக்கிப்பிடித்திருக்கிறார்கள். மொழிமீது நீங்கள் காட்டுகின்ற
முக்கியத்துவமே இதனை சாத்தியமாக்கியிருக்கிறது.
 நன்றியும் மகிழ்ச்சியும் .
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து.....
இடுகை 0036      29 - 12 - 2010

வியாழன், டிசம்பர் 23, 2010

ஈரோட்டு வலைப்பதிவாளர் சங்கமம்

வாழ்த்தும் வேண்டுதலும் !

இன்னும் இரண்டே நாட்கள்தான் மிச்சமிருக்கிறது ! வருகிற டிசம்பர் 26 தேதி தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அந்த பகுதியைச் சார்ந்து ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் இணையத்தின் பதிவாளர்கள் அத்தனைபேரும் ஒன்று கூடி புதிய சங்கமம் ஒன்றை நிகழ்த்தப்போகிறர்கள். வலைப்பூ குழுமம் ஒன்றும் ஏற்படப்போகிறது. வலைபூ வளற்சிக்கும் இணையத் தமிழுக்கும் தடையாயிருக்கிற பெருங்கற்களை நாள் முழுதும் கூடி பொறுக்கப் போகிறார்கள். நினைத்தாலே நெஞ்சம் முழுதும் பூரிக்கிறது ! உண்மையிலேயே வலைப்பூக்களின் வசீகரத்தை உணர்ந்தவர்கள்தாம் இப்படி ஒரு பூரிப்பை உணர முடியும். என்னுடைய இயல்பான பூரிப்புக்கு காரணம் அது மட்டுமல்ல. என் கடந்த கால வாழ்வுக்கு ஈரோடு நகரமே ஆதாரமாய் இருந்திருக்கிறது.அந்த பசுமையான நினைவுகளை பின்னர் எழுதப்போகிறேன்.
நடக்கப்போகிற சங்கமத்துக்கு ஈரோட்டு பதிவாளர்கள் எப்போதோ தயாராகி விட்டதை ஈரோடு கதிரின் பதிவுகளிலிருந்து அறிய முடிகிறது. எத்தனை தூரம் விழுந்து விழுந்து ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து எழுதப்படும் பதிவுகளில் காண முடிகிறது. விழா நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வடிவமைத்து பொறுப்புக்களை பகிர்ந்தளித்திருப்பதை காணும்போது சங்கமம் அடையப்போகும் சிகரத்தை இப்போதே பார்க்கமுடிகிறது. நாள் முழுதும் நிகழப்போகும் ஆய்வுகளுக்கிடையில் வயிற்றுக்கும் ஈய அவர்கள் எடுத்திருக்கும் முயற்சி பிரமிக்கத்தக்கதாய் இருக்கிறது. தொலைவிலிருந்து வரவிருக்கும் பதிவர்கள் வசதிக்காக பிரத்தியோக பதிவர்களை நியமித்திருப்பது திட்டமிடலின் சிறப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சென்னையில் இதுபோன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த எடுத்துக்கொள்ளப்பட் முயற்சி
முளையிலேயே முறிந்து போனது ஒருவகைஏமாற்றமானதுதான். இதற்கு தலையாய கரணம் வலைப்பூக்களுக்கு உலகளாவிய அங்கிகாரமும் வானளாவிய சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணமேதான்.
வலைபூ என்பது ஒரு எண்ணியலில் எழுதப்படும் நாட்குறிப்பே . அதில் என்னவேண்டுமானாலும் எழுதலாம். யாரையும் கட்டுப்படுத்தாது.-- என்ற போக்கில் ஒரு சக பதிவர் எழுதியதையும் படித்திருக்கிறேன்.
வலைப்பூ எண்ணியல் நாட்குறிப்பாக இருக்கலாம், என்ன வேண்டுமானாலும் எழுதலாம், நீங்கள் மட்டுமே படிக்கிற வரையில். அடுத்தவர்மேல் உரசாத வரையில்.நாட்குறிப்பு சி. பி. அய் வசம் சிக்காத வரையில். கட்டுப்பாடற்று பாய்வது காட்டாறு என்று கூரக்கேட்டிருக்கிறேன்.மனித இனம் அத்தகயதன்று. ஒருவகைக் கட்டுபாட்டுடன் சுதந்திரத்தை நுகர்வதே மனிதகுலத்தின் உயர்வு. ஒவ்வோரு தனிமனிதற்கும் தனித்தனியே சுய சிந்தனைகள் உண்டு.அவரவர் போக்கில் பயணிப்பதும் உண்டு.வானளாவிய உரிமை பெற்ற அத்தனை பதிவர்களையும் ஒரு கூண்டுக்குள் சிறையிடுவது என்பது ஊசி முனையில் ஒட்டகத்தை நுழைப்பதற்கு சமமானது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.இருந்தபோதிலும் இந்த தேசத்தை மாறுபட்ட பல்வேறு கட்சிகள் துணையோடு குறைந்தபட்சக் கருத்தொற்றுமையுடன் ஆட்சி செய்த பாரதீயஜனதாவைப் போல பல்வேறு மாறுபட்ட கட்சிகளோடு இணைந்து இன்றும் ஆளுகின்ற மன்மோகன் அரசைப்போல குறைந்தபட்ச கருத்தொற்றுமையுடன் அனைத்து பதிவர்களும் இணைந்து செயல்படுவது மண்ணுக்கும் மொழிக்கும் அவசியம் என்றே கருதுகிறேன்.எழுத்தின் போக்கில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. தனித்தமிழில் எழுதுவது. வட்டாரவழக்கில் வரைவது.நகைச்சுவையோடு எழுதுவது. கனவுகளை கவிதைகளாக வடிப்பது.அவலத்தை அள்ளித்தருவது. காரசாரமாக எழுதுவது . ...கண்டபடி எழுதுவது. இவற்றில் உங்கள் போக்கு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒன்றை மட்டும் கவனியுங்கள்.உங்கள் எழுத்துக்களை பொன்போன்ற காலத்தைச் செலவிட்டு எத்தனையோ நாடுகளில் வாசிக்கிறார்கள். உங்கள் வலைதளம் நீங்கள் மட்டுமே வாசிக்கின்ற எண்ணியல் நாட்குறிப்பல்ல .
அரசியல்வாதிகளின் ஊழலுக்கு நெருப்பாயிருங்கள் ! அவர்கள்தம் சுயவாழ்வை விமர்சிப்பதைத் தவிருங்கள்..ஏனெனில் அவர்கள் மண்ணில் தோன்றிய மகாத்மாக்கள் அல்ல .அவர்களும் நம்மைபோன்று சாதாரண மனிதர்களே.நம்மைவிட சில துறைகளில் பளிச்சிடுகிறார்கள்.அவ்ளவுதான்.
இன்று நாம் உச்சியில் வைத்து கொண்டாடும் பெரும்பாலானவர்கள் சுயவாழ்வில் மிகவும் ஒழுக்கமற்றவர்களே.
அடுத்து பாலுணர்வு ஊட்டும் எழுத்துக்களை மட்டுமே திரும்பத்திரும்ப எழுதுவதைத் தவிற்த்து மண் மற்றும் மொழி சார்ந்த பெருமைகளையும் இன்னும் முடிவுகள் கிட்டாத அவலங்களையும் சித்தரியுங்கள்.
கூகுளின் தேடுதலில் தமிழ் எழுத்துக்களை பொறுத்தியவுடன் அது பிதுக்கித் தள்ளுகின்ற அத்தனை வார்த்தைகளும் அன்னை தமிழுக்கு அணி சேர்ப்பதாயில்லை. இந்த தேசத்தின் செல்வங்கள் இதைத்தானா தேடின என்ற வருத்தம் என்னைவிட்டு இன்னும் அகலவேயில்லை.. இந்த தீராத தலைகுனிவுக்கு தமிழ் இணைய வல்லுநர்களின் வழிதான் என்ன.ஈரோடு சங்கமம் சரியான பாதையை சுட்டிக்காட்டட்டும்.
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து....
23 12 2010
--------------------------------
இடுகை 0034 

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !
Dear Sir, You are 100% correct. Please try to come to Erode sangamam.
By அமர பாரதி on ஈரோட்டு வலைப்பதிவாளர் சங்கமம் on 24/12/10

அன்பிற்கும் பகிர்ந்தமைக்கும் நன்றிங்கசங்கம நிகழ்வுகளை இங்கே காணலாம். http://www.erodekathir.com/ அன்புடன் ஆரூரன் விசுவநாதன்