திங்கள், மார்ச் 05, 2012

திட்டமிட்டு சறுக்கியவன் - ஒரு சிறுகதை !

வில்லவன் கோதை 
பால் பாக்கட்டோ செய்தித்தாளோ வாசலில் வீசி எரியும் சப்தம் கேட்டு கண்விழித்தாள் மாதங்கி . ஜன்னல்  வழியே ஊடுருவி உள்ளே நுழைந்த சூரியவெளிச்சம் பொழுது விடிந்ததை சொல்லிற்று. உயரத்தில் மாட்டியிருந்த டிஜிடல் கடிகாரம் மணி அய்ந்து அம்பத்தி மூன்றை துல்லியமாக காட்டிற்று..
இரண்டு கைகளையும் தலைக்கு பின்புரம் நீட்டி உடலை உலுக்கி ஒட்டியிருந்த   சோம்பலை வெளிப்படுத்தினாள்.கண்கள் இரண்டையும் அழுந்த துடைத்து மிச்சமிருந்த உறக்கதின் சுவடுகளை உதறினாள். மேலே சூழ்ந்திருந்த அழுத்தமான போர்வையை விலக்கி புடவையை சரிசெய்து கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள்.
கட்டிலின் விளிம்பில் தாறுமாறாக கிடக்கும் கணவன் முரளியை ஒருகணம் உற்றுப்பார்க்கிறாள்.நாள் முழுதும் நகரங்கும் சுற்றித்திரிந்த களைப்பு அவனது ஆழ்ந்த உறக்கத்தில் வெளிப்பட்டது.
காலடியில் சுருண்டு கிடந்த அம்முவை நேராக இழுத்து ஆடையை சரி செய்யும்போது ஏற்பட்ட சிரமம் அம்மு வளர்ந்து கொண்டே இருப்பதை மாதங்கிக்கு உணர்த்திற்று.அம்மு வளர்கிறாள் என்ற மகிழ்வையும் மீறி அவளிடமிருந்து  பெருமூச்சு வெளிப்பட்டது.
அம்மு என்கிற அனிதா பக்கத்திலிருந்த ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் அய்ந்தாவது படிக்கிறாள். அவள் சுமக்கும் புத்தகச்சுமையே அவளது உறக்கத்துக்கு இப்படியொரு அயர்வை கொடுத்திருக்கக்கூடும்.
எல்லாம் இன்னும் ஒரு அரைமணிதான். அடுத்து எழுந்து ஓட வேண்டியதுதான்.
அடுத்த கணம் நகரவாழ்க்கையின் எந்திரகதிக்கு ஈடு தர மாதங்கி தயாராகிறாள்.
பத்து வருடத்துக்கு முன்னால் முரளியை மணந்து குடவாசலில் இருந்து சென்னை புறநகர் ஒன்றில் குடியேறிய  போது வாழ்வின் அத்தனை தருணங்களும் மாதங்கிக்கு இனிமையாகத்தான் இருந்தது.முரளி சென்னை தனியார் நிதி நிருவனமொன்றில் வர்த்தக மேலாளராக இருந்தான். அவன் வாங்கிய சம்பளம் அன்றைக்கு அவர்களுக்கு போதுமானதாகவே இருந்தது.
அடுத்த வருடத்தில் அம்மு பிறந்தபோது சந்திக்க நேர்ந்த பற்றாகுறை குழ்ந்தையின் மழலையிலும் குதுகலத்திலும் காணாமற் போயிற்று.
அம்மு பள்ளியில் காலடி வைக்க நேர்ந்தபோதுதான் தங்களுக்கேற்பட்ட தடுமாற்றத்தை மாதங்கியும் முரளியும் உணரத்தலைப்பட்டனர்
பொதுவாக நகரவாழ்க்கை கிராம வாழ்க்கையைக்காட்டிலும் லகுவாக காணப்பட்டாலும் மாதங்கிக்கு குடவாசலைப்போல சென்னை வாழ்க்கை அத்தனை எளிதாக அமையவில்லை.இங்கே ஒவ்வொன்றுக்கும் ஜனத்திரள் கூட்டம் கூட்டமாக காத்திருப்பதைக்காண முடிந்தது. ஞாயவிலைக்கடைகள் முதல் தனியார் மருத்துவமனைகள் வரை நீண்டவரிசையில் நிற்க வேண்டியிருந்தது.வாழ்க்கையின் ஒவ்வொரு இயல்பான நகர்வுக்கும் நிதியாதாரம் மிகுதியாக தேவைப்பட்டது.
அதன் விளைவாக வருகின்ற ஒவ்வொரு தேவைக்கும் ஈடு தர இப்போதே மாதங்கியும் முரளியும் திட்டமிட துவங்கியிருந்தார்கள்.
ஒரு நல்ல தொகைக்கு தன்னை காப்பீடு செய்து கொண்ட முரளி வருடா  வருடம் காப்பீடு தொகையை உயர்த்திகொள்ளவும் தவரவில்லை .குடும்பத்துக்கு தேவையான மருத்துவக்காப்பீடும் மறக்காமல் செய்து வந்தான்.அம்முவின் படிப்படியான படிப்பிற்கும் தொடர்ந்து கதவைத் தட்டப்போகும் திருமணத்தேவைக்கும் நிதியாதாரங்களை இப்போதே சேமிக்கத் துவங்கியிருந்தார்கள்.. இதற்கிடையில் தங்களுடைய கனவு இல்லத்துக்கும் ஒரு வழியை கண்டறிந்திருந்தான் முரளி.
இத்தனை தேவைகளுக்கும் முரளியின் வருவாயில் முன்னுரிமை தந்த பிறகு மிச்சத்தில்தான் மாதங்கி குடும்பத்தை நகர்த்தவேண்டியிருந்தது.
வாசலில் நீர் தெளித்து கோலமிட்டு தன் பணிகளைத்துவக்கிய மாதங்கி கணவனுக்கும் அம்முவுக்கும் மதிய உணவை சிற்றுண்டிப் பாத்திரங்களில் அடைத்து வைத்துவிட்டு காலை ஆகாரத்துக்கு கடைவிரித்தபோது முரளி குளித்து ஆடையணிந்து அலுவலகத்துக்கு தாயாராயிருந்தான்.அம்முவுக்கு உணவு தரும்போது இடையிடையே அவளுக்கு தலைவாரி ஆடை திருத்த வேண்டியிருந்தது.
மாதங்கி மறக்காம இன்னிக்கு அந்த பேங் வேலல்லாம். முடிச்சிடு. இன்னிக்கி சாட்டர் டே. ஏர்ளியரா போகணும். பாங்கில ரஷ் ஜாஸ்தியா இருக்கும்.
இட்லியை சுட சுட விழுங்கிக்கொண்டே இன்றைக்கான வேலைகளை மாதங்கிக்கு நினைவூட்டினான் முரளி.
அவள் வாங்கியிருந்த டிகிரியின் பலனோ என்னவோ இப்போதெல்லாம் இந்த வங்கி வேலைகளையும் மாதங்கியிடமே முரளி விட்டிருந்தான்..
அம்முவுக்கு ஆட்டோ வரவும் முரளி ஹீரோ ஹோண்டாவை ஸ்டார்ட் செய்யவும் சரியாக இருந்த்து.
மாதங்கி ! அப்படியே டாக்டர் கிஷ்ணவேணியை பாத்து கொஞ்சம் வெவரமா கேட்டுட்டுவந்துடு..ஈவினிங் எனக்கொரு மீட்டிங் இருக்குது..
வண்டியை இயக்கிக்கொண்டே பேசினான் முரளி.
வண்டி விர்ரென்று பாய்ந்தது.
-------------------------
வாரத்தின் இறுதி நாளாயிருந்ததால் வங்கியில் வழக்கத்தைவிட கூட்டம் நிரம்பி வழிந்தது. தானியங்கி எந்திரங்கள் எப்போதோ வீதிக்கு வந்துவிட்டபோதும் மக்கள் பணம் எடுப்பதற்கும் பணம் போடுவதற்கும் வங்கிகளை ஒதுக்கியதாக தெரியவில்லை.ஒவ்வொரு முறை வங்கிக்கு வரும்போதெல்லாம் வங்கிகளில் வங்கி ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அல்லது வங்கி ஊழியர்களுக்கிடையேயும் வாய் கலப்பும் கைகலப்பும் நிகழ்வதை  மாதங்கி பார்ப்பதுண்டு. .வங்கி பணிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு கடைநிலை ஊழியரையாவது வங்கிகளில் அறிந்திருப்பது அவசியம் என்று மாதங்கிக்கு பட்டது.
என்னம்மா மாதங்கி ! பாங்க் ட்ராஸ்சாக்ஷனுக்கும் ஒன்னயே அனுப்பிச்சுட்டானா இதுக்குதான் படிச்ச பொண்ணா தேடி அலைஞ்சானா.
திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மாதங்கி.
கையில் மடக்கிய குடையுடன் சங்கரன்சார் நின்றுகொண்டிருந்தார்.நகராட்சி பள்ளியொன்றில் முப்பத்தியாறு வருடங்கள் பணியாற்றி இந்திய அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். ஓய்வுக்குப்பிறகு இந்த நகரின் இதே பகுதியை சுற்றிச்சுற்றி வருபவர்.சங்கரன் சாரை அறியாதவர்அந்தப்பகுதியில் எவரும் இருக்கமுடியாது.அத்தனை சகஜமான பேர்வழி.எல்லாருக்கும் உபயோகமானவரும்கூட.
வாங்க மாமா..நீங்க எங்க..
ஒண்ணுல்லமா..பென்ஷன் பேமண்ட்ல சின்ன ப்ராபளம். சரி பண்ணலாமுண்ணு வந்தேன். வேல முடிஞ்சுது.
போனவாரம் வீட்டுக்கு வர்தா சொன்னீங்களாமே.. சொல்லிகிட்டே இருந்தார்.
அது ஒண்ணுமில்லம்மா.. நாம சரியா இருந்தாலும் மத்தவாளும் ஒத்துழைக்கணுமோல்லியோ. என்னப்பத்திதான் ஒனக்கு நல்லா தெரியுமே..இப்பெல்லாம் வருஷத்துக்கொருமுறை கம்ளீட் செக்கப் தவறாம பண்ணிட்ரன்.போனவாரம் ராஜ் லாப்ல டேட்ட மாத்தி குடுத்துட்டான். முரளிகிட்ட சொல்ல முடியல்ல..
இயலாமையை வெளிப்படுத்தினார் சங்கரன் சார்.
ரிசல்ட் எல்லாம் நார்மல்தான..
மெதுவாக இழுத்தாள் மாதங்கி.
பகவான் புண்ணியத்தில எல்லாம் நார்மல்தான்.இனி நிம்மதியா ஊர சுத்திவரலாம்.வயசாயிட்டா பெத்த புள்ளைங்களுக்குகொட பாரமா இருக்கப்புடாது..வர்ர ஞாயித்து கெழம கட்டாயம் வர்ரேன்னு முரளிகிட் சொல்லு..
சாரிடம் விடைபெற்றுக்கொண்டு வங்கியைவிட்டு வெளியேறினாள் மாதங்கி.
மாதங்கி வீட்டை அடையும்போது பகற்பொழுது சாய்ந்து மணி இரண்டை தொட்டிருந்த்து.காலையில் ஒருவாய் காப்பிமட்டுமே குடித்திருந்தாள். பெரும்பாலும் வெளி வேலைகளுக்கு கிளம்பும்போது காலை சிற்றுண்டியை தவிர்த்து விடுவாள்.
முகம் கைகால்களை கழுவி ஒருகிண்ணத்தில் கையளவு காலையில் வடித்த சாதத்தை போட்டு  மோரும் நீரும் கலந்து    துளி மாங்காய் ஊருகாயுடன் மின் விசிரிக்கடியில் அமர்ந்தாள்.முகத்தில் ஒட்டியிருந்த குளிர்ந்த நீரில்  வேகமாக சுழலும் விசிறியின் காற்று பட்டு குளுகுளுவென்றிருந்த்து. உறக்கம் கண்களில் காத்திருந்த்து.
வங்கி வேலைகளை முடித்துக்கொண்டு வரும்போதே வழியில் கிர்ஷ்ணவேணி கிளினிக்கில் மாலை சந்திப்பிற்கு முன்பதிவு செய்துவிட்டு வந்திருந்தாள்.இந்த முற்பகலிலேயே அந்த மருத்துவரை மாலையில் காண பதினாறாவது எண் தந்திருந்தார்கள்.
நகரவாழ்க்கையில் அத்தனை நெரிசல்.
ஆறு மாதத்துக்கு முன்னால் இடது மார்பின் ஒரத்தில் ஏற்பட்டிருந்த சுண்டைக்காயளவு சதை உருண்டை மாதங்கிக்கு லேசான வலியையோ வேறு எந்த சிரமத்தையோ கொடுத்ததாக நினைவில்லை.கடந்த இரண்டுவாரமாக அந்த உருணடை தன் குணத்தை மெல்லமெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தது. .அவ்வப்போது தோன்றி மறைந்த அந்த நெருடல் இப்போதெல்லாம் அடிக்கடி வரத்துவங்கியது.அந்த தசை உருண்டையை மாதங்கி இப்போதெல்லாம் அன்னியமாக உணர தலைப்பட்டாள். மெல்லத்தோன்றி மறைந்த அந்த நெருடல் லேசான வலியாக மாற்றம் பெற்றது. முரளியிடம் கூட பத்துநாட்களுக்கு முன்தான் பகிர்ந்து கொண்டாள்.அடிக்கடி நட்பாக வந்து போகும் ராஜி மாமிகூட வெப்பத்தின் விளைவாக இருக்கக் கூடுமென்றாள். கைவைத்தியமாக தெரு ஓரத்தில் மண்டியிருந்த ஏதோ இரண்டு இலைகளை அறைத்துப்போட அறிவுரை சொன்னாள்.
தெருக்கோடியில் குடியிருக்கும் பானுமாமி எண்ணை குளியல் அவசியம் இன்னுமொருமுறை செய்ய யோசனை சொன்னாள்.
எதற்கும் அசையாதபோது தன் பரபரப்பான பணிகளுக்கிடையே முரளி  மாதங்கியை டாக்டர் கிருஷ்வேணியிடம் அழைத்துச்சென்றான்.
டாக்டர் கிருஷ்ணவேணி தொடர்ந்து வலி நிவாரணிகளை விழுங்கச்செய்து மாதங்கிக்கு தசை உருண்டையின் நினைவுகளை மறைத்தாள்.கடந்த இரண்டு நாட்களாக கிருஷ்ணவேணியின் தொடர்ந்த அதிரடித்தாக்குதல்களுக்கு சலித்துப்போய்  தசை உருண்டை தன் குணங்களை காட்டத்தொடங்கியது.. இப்போதெல்லாம் வலி விண் விண்ணென்று தெரிக்கத்துவங்கியது.இயல்பாக எந்தவேலையிலும் மனம் செல்லவிலை.
வாசலில் அழைப்புமணி ஒலித்தபோது மாதங்கி உறங்கத் தொடங்கியிருந்தாள்.வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கிப்போட்டு ஏதோ புதுமாதிரியான ஒரு ரிசிப்பி செய்யப்போவதாக நகரின் பிரதான ஓட்டல் ஒன்றின் தலைமை செப் தொலைக்காட்சியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
அம்மு அதற்குள்ளாகவா வந்திருப்பாள்.. மணி ஆகலயே....ஆட்டோ சத்தம்கொட கேக்கலியே.....என்ற சிந்தனையில் எழுந்து கதவைத் திறந்தாள் மாதங்கி.
வியற்க விருவருக்க முரளி வேகமாக உள்ளே நுழைந்தான்
மீட்டிங் கேன்சலாயிடுச்சி...பக்கத்ல ஒரு க்ளைண்ட பாக்கவந்தேன்.என்ன வரச் சொல்லிட்டு அவன் எக்மோருக்கு போயிட்டான்..
ஆடைகளை களைந்து லுங்கியை அணிந்து கொண்டான்.அப்படியே முகம் கைகால்களை கழுவி துண்டால் துடைத்துக்கொண்டே சோபாவில் அமர்ந்தான்..
பாங்கில ட்யூஸ் எல்லாம் கட்டிட்டியா.. ஒண்ணும் ப்ராபளம் இல்லியே...
அவனுக்கு எப்போதும் அதே நினைவு.
கட்டிட்டேன்..
சாப்ட்டியா..
ம்.....நீங்க.
ஆச்சு
கீழேகிடந்த ரிமோட்ட எடுத்து தொலைக்காட்சியை நிருத்தினான்.அவனுக்கு இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எப்போதும் தொல்லையாகத்தான் இருந்து.
பாங்குல சங்கரன் சாரை பாத்தேன்.
போனவாரம் வர்ரேண்டாண்ணாரே...என்னவாம்..
கம்ளிட் செக்கப்புக்கு போயிட்டாராம். ஒங்ககிட்ட சொல்ல முடியலையாம்..
வருஷா வருஷம் அட்வானசா தண்டம் வெக்கலேன்னா கெழத்துக்கு இருப்பு கொள்ளாது..அது சரி...க்ளினிக்ல டோக்கன் வாங்கிட்டியா...
ம்..பதினாறு..
ஓடிக்கொண்டிருந்த மின் விசிறி வேகம் குறைந்து நின்றது . மினசாரம் நின்று போயிருக்கும்.
பிரிட்ஜ்ல இருந்த குளிரூட்டப்பட் நீரை எடுத்து பருகிக்கொண்டே வாசலுக்கு வந்தான் முரளி. எதிர் திசையில் இருந்த மின் கம்பத்தில் எதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள் .வயர்மேன் பரமசிவம் கம்பத்தின் உச்சியில் கட்டிங் பிளையரால் வயர்களை பிரித்துக் கொண்டிருந்தான்..கம்பத்தின் அடியில் ஹெல்பர் காளிமுத்து மேலே பார்த்தவாறு நின்றிருந்தான்.
ஏ...பரமசிவம் இறங்குடா க்ழே..
அப்போதுதான் டூவீலரில் வந்த போர்மேன் வீரப்பன் வண்டியை நிருத்தியவாறே கொடூரமாக கத்தினான்...தயக்கத்தோடு திரும்பிப்பார்த்தான் பரமசிவம். 
பெல்ட் ரோப் இல்லாம வேலைக்கு வராதேண்ணு ஒனக்கு எத்தன தடவ சொல்றது.. நீங்க உளுந்து சாவுரதும் இல்லாம எங்க உயிரையும் எடுக்கிறீங்க.. காளிமுத்து...  ரோப்ப தூக்கிப்போட்ரா..
மேலே அண்ணாந்து பார்த்து பேசினான் வீரப்பன்.
பக்கத்தில் நின்றிருந்த ஹெல்பர் காளிமுத்து கையிலிருந்த பெல்ட்ரோப்ப தூக்கி மேலே வீசினான்.குனிந்து பவ்யமாக பிடித்த பரமசிவம் இடுப்பைச்சுற்றி முடிபோட்டு கம்பத்தில் இணைத்தான்..
ஒரு ஜாயிண்டுதானேண்ணு...
மெதுவாக இழுத்தான் பரமசிவம்.
நீ உசுரோட இருந்தாதானே உன் குடும்பம் கஞ்சி குடிக்கும்.மொதல்ல ஒன்ன காவந்து பண்ணிகடா..
வேகத்தை குறைத்துக்கொண்டு நயமாக பேசினான் வீரப்பன்..
அந்த வார்த்தைகள் பரமசிவத்துக்கு உரைத்ததோ இல்லியோ முரளிக்கு தீயாக சுட்டது. அவசரமாக உள்ளே நுழைந்தான் முரளி. மாதங்கிக்கேற்பட்ட பிரச்சனையில் தான் இத்தனை அலட்சியம் காட்டியிருக்கக்கூடாது என்று இப்போது தோணியது. வேறு ஒரு டாக்டரின் அபிப்பிராயத்தையும் பெற்றிருக்கவேண்டும் என்ற நினைவு மீண்டும் மீண்டும் எட்டிப் பார்த்தது.  சங்கரன் சாரின் ஹெல்த் செக்கப்பை தான் கிண்டலடித்தது எத்தனை தப்பானது என்று அவனுக்கு தோன்றியது. அவ்ளவுதான்..
மாதங்கி ! வீட்ட லாக் பண்ணி பக்கத்து வீட்ல சாவிய கொடுத்துட்டு கிளம்பு. அம்மு வந்தா வாங்கிகுவா...தாம்பரத்ல நம்ம டாக்டர் திரிபுரசுந்தரிய கன்சல்ட் பண்ணிட்டு வருவம்.
ஏங்க ..இப்ப கிருஷ்ணவேணிக்கெனனா.. நல்லாதானே பாக்றாங்க......அவங்கதான் பேசிப்பேசியே பேஷண்ட கொல்லுவாங்கண்ணு நீங்க சொல்லுவீங்களே..
திடீர் திருப்பத்திற்கு பொருள் புரியாமல் மாதங்கி குழம்பினாள்..
அவுங்க கொஞ்சம் அதிகமாதான் பேசுவாங்க..இருந்தாலும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் டாக்டர். ..நமக்கு வேண்டியவங்க கொட. கொஞ்சம் டீட்டெயிலா சொல்லுவாங்க.. அதனாலதான் சீனியர் சிட்டிசன்ஸ் எல்லாம் அவங்கள  பிரிபர் பண்றாங்க..
பேசிக்கொண்ட தயாரானான் முரளி.
மாதங்கி தனக்கேற்பட்டிருக்கும் பிரச்சனை விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்தாள்.
--------------------------------------------

மக்கள் நடமாற்றமற்ற அந்த வீதியின் முனையில் இருந்தது டாக்டர் திரிபுரசுந்தரியின்  க்ளினிக்.வாசலில் குறுக்கும் நெடுக்குமாக மரச்சட்டங்கள் அடிக்கப்பெற்று பச்சை வண்ணம் பூசப்பட்டிருந்த்து. அதுவும் தச்சு வேலைகள் செய்தபோது பூசப்பட்டிருக்க வேண்டும்.
டாக்டர் திரிபுர சுந்தரி மகளிர் நல சிறப்பு மருத்துவர் என்று வெள்ளை வண்ணத்தில் எழுதப்பட்ட ஒரு பழய பெயர்ப்பலகை கதவுகளுக்கு அருகில் ஒழுங்கற்று தொங்கியது.அந்த பெயர்ப்பலகையின் நெற்றியில் ஒரு நாற்பது வாட்ஸ் குண்டு பல்பு சிணுங்கி மருத்துவர் வந்துவிட்ட தகவலை அந்த தெருவுக்கே பரை சாற்றிற்று.
முரளியிம் மாதங்கியும் க்ளினிக்கில் நுழைந்தபோது நோயாளிகள் வருகை அவ்ளவாக காணப்படவில்லை.இரண்டு வயதுமுதிர்ந்த பெண்மணிகளும் ஒரு நடுத்தரவயது பெரியவரும் ப்ளாஸ்ட்டிக் இருக்கைகளில் காத்திருந்தனர்.உள்ளே ஒருவர் ஆணோபெண்ணோஇருக்க்க்கூடும். வாயிலில் காணபட்ட காலணியிலிருந்து அவர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளமுடிந்தது.
இப்படியும் சில மருத்துவர்கள் நகரத்தில் பொழுது போக்காக தொழில் புரிவதை மாதங்கி புரிந்து கொண்டாள்.இரண்டொரு இருக்கைகள் காலியாக இருந்த போதும் முரளிக்கும் மாதங்கியும் எதிலும் உட்கார வில்லை. முரளி ஒரு இடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ஒருவழியாக உள்ளேயிருந்த பெண்மணி கையில் மருந்துக்கான பரிந்துரையுடன் வெளிப்பட்டார்.மருத்துவரின் நிதானமான உரையாடலில் எழும்ப மனமின்றி வாசல் வரை பேசிக்கொண்டே வந்தார்.அதே சமயம் இருக்கையில் இருப்பு கொள்ளாமல் தவித்திருந்த இன்னொரு நடுத்தரவயது பெரியவர் வேறுயாரும் நுழைவதை தவிற்க விருட்டென்று உள்ளே நுழைந்தார்.நேரம் நகர நகர ஒருவர் ஒருவராய் வந்து கொண்டேயிருந்தனர்..
சரியாக இரண்டு மணி நேரத்துக்குப்பிறகே முரளியும் மாதங்கியும் உள்ளே நுழைந்தனர்.
யாரு..பயினான்ஸியல் ப்ளானரா.. வாங்க .. வாம்மா..
கண்களிலிருந்த கண்ணாடியை கழற்றி கைத்துண்டால் துடைத்துக்கொண்டே வரவேற்றார் டாக்டர் திரிபுர சுந்தரி.ஏறக்குறைய அய்ம்பது வயது இருக்கும். களையான முகம். கூர்மையான பார்வை.. கணீரென்ற குரல்.
எனக்கு டாக்ஸ ப்ளானிங்கல்லாம் செஞ்சி தர்ரேண்ணு சொல்லிட்டு போனவன்தான....
கையிலிருந்த கண்ணாடியை அணிந்து கொண்டே பேசுகிறார் திரிபுர சுந்தரி.
கம்பெனி ட்ரெய்னிங்ல ஹைட்ராபாட் போயிட்ன் ...
அவசரம் அவசரமாக ஒரு பொய்யை சொல்லிக்கொண்டே எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் முரளி. மாதங்கி டாக்டரின் அருகிலிருந்த மர ஸ்டூலில் உட்கார்ந்தாள்.
சரி ..இப்ப என்ன ப்ராபளம்..
முரளியை கூர்ந்து கவனித்தார் டாக்டர்.
இவளுக்கு லெப்ட் ப்ரஸ்ட் ஒரமா ஒரு சின்ன கட்டி..
மெல்ல துவக்கினான் முரளி.
எவ்ளவு நாளா...
ஆறு மாசத்துக்கு மேல இருக்கும். ஆன அது எந்த தொந்ரவும் கொடுத்த்தில்லை..இப்ப இரண்டு நாளாதான் லேசா...உருத்தல்.. 
பதில் சொல்லும்போதே தன்னுடைய அலட்சியம் முரளிக்கு தெரிகிறது..
ஏம்மா..அவந்தான் காசு காசுண்ணு சுத்திகிட்டு இருந்தா நீ என்னம்மா பண்ணே. போஸ்ட் கிராஜுவேட்டுண்ணு சொன்னானே...
டாக்டரின் முகத்தில் கடுமை தெரிந்த்து.
பக்கத்ல இருந்த ஒரு டாக்டர்கிட்ட காட்டி டேப்ளட்லாம் சாப்ட்டேன்.நாலஞ்சு மாசம் வலி தெரில..ஒரு தொந்ரவும் இல்ல.இப்ப ஒருவாரமா தொடர்ந்து உருத்திகிட்டே இருக்கு.
பெரும்பாலான டிசிஸ்ஸ் டெம்ரவரியா வரும்.. தானா சரியா போரதும் உண்டு.ஒரு வாரமோ பத்து நாளோ தாண்டி ப்ராபளம் இருந்துச்சின்னா அதுக்கு காரணம் இருக்கும். அத சரி பண்ணாம திரும்பத்திரும்ப வலிமாத்திரையையே சாப்பிட்டுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்...உள்ள போ.
கையிலிருந்த ஸ்டெத்தாஸ்கோப்பை மேஜையில் வைத்துவிட்டு எழுந்தார் டாக்டர்.
மாதங்கி எழுந்து அந்த மறைவான அறைக்குள் நுழைந்தாள்.டாக்டரும் பின்தொடர்ந்தார். முரளி எதுவும் தோன்றாமல் தலை குனிந்திருந்தான்.
அய்ந்து நிமிடத்தில் வெளியே வந்த டாக்டர் ..
பயாப்ஸி டெஸ்ட் செய்யணும்.
என்று சில உபகரணங்களுக்காக பரிந்துரை சீட்டு ஒன்றை எழுதிக்கொடுத்து வாங்கிவரச்சொன்னார்.முரளி அவசரம் அவசரமாக வெளியேறினான்.டாக்டர் அடுத்த நோயாளியை பார்க்கத்துவங்கினார்.
கடைகடையாய் தேடி டாக்டர் எழுதியதை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்து டாக்டரிடம் கொடுத்தான்.
கொஞ்சம் வெயிட் பண்ணு.. என்று அந்த மறைவான அறைக்குள் நுழைந்தார் டாக்டர் திரிபுரசுந்தரி.
முரளிக்கு ஏதேதோ நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றி சோர்வைக் கொடுத்தது. மாதங்கிக்கேற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு தன்னுடைய அலட்சியமும் தலையாய காரணம் என்ற குற்ற உணர்வு முரளியை மேலும் மேலும் வருத்திற்று.
அடுத்த அரைமணி நேரத்திற்குப்பிறகு டாக்டர் கைகளை கழுவிகொண்டு வெளியே வந்தார்.
முரளி..நாளைக்கு க்ளினிக் இருக்காது. ஆனா நான் வருவேன்.காத்தால நீ ஒரு பத்தரை மணிக்கு வந்து என்ன பாரு..
டாக்டர்.. பயப்படும்படியா...
டெஸ்ட் ரிசல்ட் வரட்டும்.பாக்கலாம் வா.
இருக்கையில் இருந்த தேங்காப்பூ துண்டால் கைகளை துடைத்துக்கொண்டே எழுந்தார். திரிபுரசுந்தரி.
மாதங்கி புடவையை சரி செய்து கொண்டு முகத்தை சுளித்தவாரறே அந்த அரையை விட்டு வெளியே வந்தாள்.
முரளி வண்டியை ஸ்டார்ட் செய்தான் . மாதங்கி புடவையை சரி செய்துகொண்டே வண்டியில் ஏறி அமர்ந்தாள்.இருவருக்கும் ஏதும் பேசத்தோன்றவில்லை. வண்டி புதிதாக்கட்டப்பெற்ற தாம்பரம் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து சென்றது.அந்த மாலை நேர ரம்மியமான காட்சியை வழக்கம்போல அன்று அவர்களால் ரசிக்கமுடியவில்லை.
டாக்டர் என்ன செஞ்சாங்க..  முரளி பேச ஆரம்பித்தான்.
மொதல்ல சும்மா கையால தடவி பாத்தாங்க...அப்ரம் ஏதோ இன்ஸ்ட்மெண்டால சிப் பண்ணி துளியோண்டு சதையை எடுத்து பேக் செஞ்சாங்க..எங்கயோ டெஸ்ட்டுக்கு அனுப்பனுமாம். வலி உயிரே போயிடுச்சி.
அதற்குப்பிறகு வீடுவரை அவர்கள் எதுவும் பேசவில்லை. 
வீட்டுக்குள் நுழைந்தபோது அம்மு வாசலிலேயே நின்றிருந்தாள்.
முகம் கை கால் கழுவ வேண்டுமென்று தோன்றாமல் முரளி சோபாவில் சாய்ந்தான். மாதங்கி குளித்து புடவை மாற்றிக்கொண்டு கணவனிடம் வந்தாள்.
ஒங்ககிட்ட  என்ன சொன்னாங்க ..
பெருசா ஒண்ணும் இருக்காதுண்ணார்.
பின்ன ஏன் இப்பிடி இருக்கீங்க.. சாப்பிட வாங்க.
எனக்கு பசி இல்லம்மா. அம்முவும் நீயும் சாப்புடுங்க..
அப்ரம் ஏன் இப்பிடி இருக்கீங்க..
.ஒண்ணும் கவலப்படாதே. இப்போல்லாம் எல்லாத்துக்கும் வைத்தியம் இருக்கு.
அவளுக்கு ஆறுதல் சொல்வதாக கருதி தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டான்
எதுக்கு எல்லாம்...
அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
அன்று அவர்களுக்கு மேலும் பேசுவதற்கு தைரியம் இல்லாதிருந்தது. மிகுந்த குழப்பத்துடன் அம்முவுடன் அடுக்களைக்குள் நுழைந்தாள்
அம்முவுக்கு நடப்பது எதுவும் புரியாமலிருந்த்து. .அம்மாவும் அப்பாவும் ஏன் இப்படி இருக்கிறார்கள். ஏதாவது சண்டையாய் இருக்குமோ..
விடை புலப்படாமல் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
---------------------
வண்டிய காணுமே. ஞாயித்துக்கெழமேலகொட எங்கம்மா போயிட்டான்.
சங்கரன் சார்  வழக்கம் போலவே மடக்கிய குடையுடன் உள்ளே நுழைந்தார்.
வாங்க...
மாதங்கி வரவேற்ற தோரணை ஒரு குழப்பமான சூழலை வெளிப்படுத்தியது. அதை ஒருவாறு உணர்ந்து கொண்ட சங்கரன் சார் குடையை ஓரமாக சாத்தி வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தார்.
அவர் தாம்பரம் வரைல ஒரு டாக்டரை பார்க்க இப்பதான் போனார்..
உணர்வற்று பேசினாள் மாதங்கி.
ப்ளானிங் பண்ரேண்ணு ஒரே அமுக்கா அமுக்கிடுவானே.
மோடாவிலிருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து ஒருவாய் தண்ணீரை குடித்தவாறே பேசினார் சங்கரன்.
நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே..முகத்ல மலர்ச்சியே காணுமே.
தான் கண்டு கொண்டதை பகிங்கரமாக வெளிப்படுத்தினார் சங்கரன்.
இனியும் மறைக்கத் தோன்றவில்லை மாதங்கிக்கு.
மார்பு ஓரத்ல சின்ன கட்டி. நேத்து டெஸ்ட்டுக்கு குடுத்துட்டு வந்தோம்.
அதான் ஒரே குழப்பமா இருக்கு...
சொல்ல்லாமா வேண்டாமா என்ற தயக்கத்தை தவிற்து ஒருவழியாக சொல்லுகிறாள் மாதங்கி.
ப்ரஸ்ட் கேன்சரா இருக்குமோண்ணு பயப்பட்ரியா...
நேரடியாகவே சிக்கலுக்குள் நுழைந்தார் சங்கரன்.
மாதங்கிக்கு பதில் சொல்ல துணிவு இல்லாமல் போயிற்று.எந்த நோயின் பெயரை உச்சரிக்க முரளியும் மாதங்கியும் தயங்கினார்களோ
அதை பட்டென்று போட்டு உடைத்தார் சங்கரன் சார்.
மாதங்கி எதுவும் பேசவில்லை.
எல்லா டிஸிஸும் ஒண்ணுதாம்மா. எதுவுமே அலட்சியமா இருந்தா ப்ரச்சனதான்.ப்ளட் ப்ரஷர்ல சாவே இல்லியா. சுகர் சும்மா இருக்குண்ணு நெனக்கிறியா.
சங்கரன் சார் நிமிர்ந்து பார்த்து தெளிவாக பேசினார்.
எந்த பாவமு பண்ணாத எங்களுக்கு..
காப்பியை ஆற்றி மோடாவில் வைத்துக்கொண்டே கண் கலங்கினாள் மாதங்கி.
ச்சேச்சே. படிச்ச பொண்ணுதான நீ. வியாதியெல்லாம் பாவ புண்யம் பாத்தா வர்ரது. வெவரம் தெரியாத வியாதியெல்லாம் பாவம் செஞ்வனுக்குத்தான் வரும்ண்ணு ஒரு காலத்ல மெரட்டி வைச்சது உண்மைதான்.இண்ணிக்கும் கேன்சர் புகயிலை போட்டா வரும் புடவை கட்னா வரும்ண்ணு சொல்லிகிட்டு இருக்காங்களே தவிற சரியான நம்பும்படியான காரணத்தை யாருமே சொல்லல.
ஆன ஒண்ணு....ஆரம்பத்லேயே எதையும் கண்டுகிட்டா தடுத்துட முடியுமுண்ணு புரூப் பண்ணிருக்காங்க..அதுக்கான மெமோ கிராபி , ஹீமோ தெரபிண்ணு எத்தனையோ முறைகளை வெச்சிருக்காங்க.. எதுக்கும் பயப்படவே வேண்டாம்.
நம்பிக்கையை ஏற்படுத்த பக்குவமாக பேசினார் சங்கரன் சார். எபபோதும் சிறப்பித்து பேசும் மாதங்கியின் பில்டர் காப்பியின்  சுவை இன்று அவர் கவனத்தை அவ்ளவாக ஈர்க்கவில்லை.
கண்களில் வழிந்த நீரை துடைத்தவாறு பதிலேதும் பேசாமல் கதவுக்கருகில் நின்றிருந்தாள் மாதங்கி. அவள் மனம் அவருடைய சமாதானத்தை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
பின் வாசற் கதவுக்கருகில் தலை குனிந்து ஹோம் ஒர்க் செய்துகொண்டிருந்த அம்மு சங்கரன் சாரின் பேச்சையும் கண்கலங்கி நிறகும் அம்மாவின் முகத்தையும் திரும்பித்திரும்பி பார்த்தவாறே இருந்தாள். அம்மாவுக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவளால் உணரமுடிந்தது.
------------------------------------
முரளி க்ளினிக்கை அடைந்த போது டாக்டர் திரிபுர சுந்தரி முன்னதாகவே வந்திருந்தார். டாக்டரைத் தவிற வேறு எவரும் இருப்பதாக தெரியவில்லை. வண்டியை நிருத்தி பூட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.
வநது உட்கார் ..
எதிரில் இருந்த இருக்கையை காட்டினார் திரிபுர சுந்தரி.மௌனமாக இருக்கையில் அமர்ந்தான் முரளி.அவன் முகம் உணர்வற்று காணப்பட்டது.
ஸ்லைட்டா கேன்சருக்கான சிம்டம் தெரியுது. இப்பவாவது பாக்கணும்ண்ணு ஒங்களுக்கு தோணுச்சே.
முரளி ஒன்றும் பேசவில்லை. டாக்டரே திரும்பவும் பேசினார்
லைப்ல ஒண்ணு ஒண்ணுக்கும் இப்ப ப்ளான் பண்றீங்க..நல்லதுதான்.
குழந்தையோட எதிர்கால தேவைகளுக்கு பணம் சேக்ற...பேமிலிக்காக லைப இன்ஷூர் பண்ணிருக்கே...குடும்பத்துக்கே ஹெல்த் பாலிசி வைச்சிருக்கே...எல்லாம் சரிதான்..ஒடிகிட்டே இருக்கிற இந்த ஒடம்புல என்ன குறைண்ணு வருஷத்துக்கு ஒருதடவையாவது பாக்க வேணாமா.நாற்பது வயசை தொட்டுட்டா ஒரு கம்ளீட் செக்கப் எடுத்துக ணும்ண்ணு தோணலியா...
சரி போகட்டும் .ஒண்ணும் பயப்படாதே.
இந்த இன்ஸ்ட்டியூட்டுக்கு திங்கக்கிழமை காலேல ஏழரை மணிக்கெல்லாம் அழைச்சிகிட்டு போ. கம்ளீட்டா க்யூர் ஆக
ஆறு மாசம் அலைய வேண்டியிருக்கும். எல்லாம் சரியா போயிடும்.
பேசிக்கொண்டே பரிந்துரை எழுதினார். திரிபுரசுந்தரி.
டாக்டருக்கான கட்டணத்தை கொடுத்துவிட்டு டாக்டரின் பரிந்துரையுடன் வெளியேறினான் முரளி.
வாழ்க்கையின் விளிம்புகளை திட்டமிடடு வெல்ல முயன்ற முரளிக்கு ஏற்பட்ட சறுக்கல் அவனுடைய திட்ங்களினால் ஏற்பட்டது அல்ல .
மழை பொழியும்போது இலை தழைகளுக்கேற்படும் ஞாயமான மகிழ்ச்சி
அதன் வேர்களின் மூலமாகவே கிடைக்கக்கூடும் .அந்த வேர்கள் காக்கப்படவேண்டும்.
-----------------------
 (மார்புப்புற்று நோய் சர்ந்த விழிப்புணர்வு கருதி எழுதப்பட்டது.)


இடுகை 0088

2 கருத்துகள்:

  1. உங்களுடைய தொடர்ந்த பார்வையும் உங்களது பல்வேறு மறுமொழிகளை பல்வேறு இடங்களில் பார்த்தும் வருகிறேன். மிக்க நன்றியும் மகிழ்வும்

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !