சனி, ஏப்ரல் 09, 2011

தமிழ் மண்ணில் தி . மு . க வின் காலடிகள் !


( திராவிட இயக்கத்தின் வரலாறு சுவையானது மட்டுமல்ல , பயனானதும் கூட . திமுக வையும் கலைஞரையும் இரண்டு வகையினர் வரிந்து கட்டிக் கொண்டு வசை பாடுவதை காண்கிறேன்.
ஒன்று  சுய மரியாதை , பகுத்தறிவு , இட ஒதிக்கீடு சிந்தனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் . திமுக வைத்தவிற வேறு எவருக்கும் இவற்றில் அக்கரையில்லை என்பதை நன்றாக அறிந்தவர்கள்.அதனால் தக்க தருணம் பார்த்து கூட்டம் கூட்டமாக கூச்சல் எழுப்புகிறார்கள்.
இன்னொன்று  திமுக யாருக்காக போராடுகிறது என்று அறியாத பாமர மக்கள். திமுகவின் சரித்திர காலடிகளை உணராத இன்றைய இளைய தலைமுறை. 
இன்றைய இளைஞர்கள் ஓய்விருக்கும் போது  திமுக விட்டு வந்திருக்கும் தடங்களை ஒருமுறையாவது புரட்டிப் பார்க்கவேண்டும். எல்லா இயக்கங்களைப் போல திமுகவிலும் ஊழல் ஊடுருவியிருப்பது உண்மைதான்.அதனையும் மீறி திமுக இந்த மண்ணுக்கு தேவையான இயக்கமே. . அதற்கு மாறான ஒரு இயக்கமோ ஒரு தலைமையோ இன்னும் இந்த மண்ணில் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை )
 காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இயக்கங்களை மட்டுமே பாற்கப்பட்டு ( அன்நாளில் அறியப்பட்டு அல்ல ! ) வந்த எனக்கு சமுதாய சீர்திருத்தங்களை முன்னிறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தி வந்த திராவிட இயக்கத்தின் தோற்றம் புலப்பட வெகுநாளாயிற்று.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்புக்களில் இழைக்கப்பட்டுவந்த அநீதிகளுக்கெதிராக குரல் கொடுத்த சுயமரியாதை இயக்கமே பின்னாளில் தந்தை பெரியார் தலைமையில் திராவிட கழகமாக உரு வெடுத்தது. இன்றும் நீரு பூத்த நெருப்பாக இந்த மண்ணில் காணப் பெரும் சாதீயக் களைகள் எனக்குத்தெரிந்து தஞ்சை மண்முழுதும் மண்டிக் கிடந்த சமயம். தீண்டாமையும் சாதீயக்கொடுமைகளும் தமிழ் மக்களின் ஒவ்வொரு அங்கங்களிலும் நிறைந்து கிடந்த நேரம். பிராமணர்கள் சமூகத்தின்அனைத்து பிரிவினரையுமே தவிற்து தனித்து நின்றனர். உயர் சாதியினர் என்று கருதிக் கொண்ட ஒரு வகுப்பினர் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து விலகி வாழ்ந்தனர். தாழ்த்தப்பட்டோரோ தலித்துகளை முழுதும் நிராகரித்தனர்.
1959 ல் முதன் முதலாக சென்னை மாநகராட்ச்சியை திமுக கைப்பற்ற காரணமாயிருந்த கலைஞருக்கு அண்ணாவின் கணையாழி ! திமுகவின் வருங்கால வெற்றிக்கு அடையாம் காட்டிய நிழற்படம். பின்நாளில் திமுகாவை விட்டு வெளியேறிய ஒருசில தம்பிகளின் கண்களுக்கு எரிச்சலூட்டிய கருப்பு வெள்ளை !


மொத்தத்தில் சகமனிதர்களை சகமனிதர்களே வெறுத்து ஒதுக்கும் இழிநிலைதான் அன்று காணப்பட்டது. அரசுப்பள்ளிகளில் குழந்தைகள் கூட தனிமை படுத்தப்பட்டனர். குளம் குட்டைகளில் தனியுரிமை கொண்டாடப்பட்டது. ஆண்டவனின் அருளுக்கு சாதீயத்தகுதிகள் தேவைப்பட்டன.
களைப்புக்கு தேனீர் குடிப்பது தீய செயலாக கருதப்பட்டது.  தேனீர்க்கடைகளே ஊருக்கு வெளியேதான் இருந்தன. அங்கேயும் தலித்துகளுக்கு தனிக்குவளை பொறுத்தி அவர்களை வெகு தூரத்தில் நிறுத்தினர். தோளில் போட வாங்கப்பட்ட துண்டு இடுப்பிலும் தலையிலும் மட்டுமே கட்ட அனுமதிக்கப்பட்டது. சலவைத்தொழிலாளரும் முடிதிருத்துவோரும் ஊருக்குள் நுழையும்போதே காலணிகளை ( காலணி வைத்திருப்போர்) கைகளில் எடுத்துக்கொள்வதை கண்டிருக்கிறேன்
.தலித்துகளை , தாழ்த்தப்பட்டோரை தொடநேர்ந்த தருணங்களில் தீட்டாக கருதி தலைமுழுகவும் வேண்டியிருந்தது. மணிக்கணக்கின்றி மாடாய் உழைத்த தலித்துகளை ஒதுக்கிய தாழ்த்தப்பட்டோர் நிலையும் , மொத்த சமூகத்தையுமே தீண்டத்தகாததாக கருதிய பிராமணர் நிலையையும் இனம் புரியாத குழப்பத்துடன் கண்டவன் நான்.
பிராமணர்களின் எழுத்துக்களே பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பெற்றது. எங்கள் ஊர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் பிராமணராக இருந்தார். ஊருக்குள் இருந்த அஞசல் அலுவலகத்தின் அதிகாரி அய்யங்காராக இருந்தார் .ஊருக்கு வெகு தொலைவில் காணப்பட்ட புகைவண்டி நிலையத்துக்கும் பொறுப்பாளர் ஒரு பிராமணரே.
இங்கே சொல்லப்பட்ட அத்தனை அலுவலகங்களிலும் கடை நிலை ஊழியர் தாழ்த்தப்பட்டவராகவே இருக்க நேர்ந்தது. அதனால்தான் பின்னாளில் ஈர்க்கப்பட்ட பகுத்தறிவுக் கருத்துக்கள் இனறும் எனக்குள் பசுமையாக இருப்பதை உணர்கிறேன்.

சமீபத்தில் வெளியிடப்பெற்ற சட்ட வல்லுநர் டாக்டர் அம்பேத்காருடைய வாழ்வை விளக்கும் திரைப்படம் ஒன்றைக் கண்டிருக்கலாம்.. பட்டம் பெற்று பதவியில் அமரும் அம்பேத்கார் அவருடைய அலுவலகத்திலேயே ஒரு குவளை நீருக்கு எத்தனை எதிர்ப்பை ஏற்க நேர்ந்தது என்பதையும் சாதீயப்பேய் இந்த தேசத்தில் எப்படி நீக்கமற நிறைந்திருந்தது என்பதையும் சித்தரித்திருந்தார்கள். நெடு நாட்களுக்கு முன் அன்நாளைய இந்தியஜனாதிபதியும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவருமான பாபு ஜெகஜீவன் ராம் மத்தியமாநிலத்தில் திறந்து வைத்த ஒரு சிலையை அதே நாளில் எண்ணை தேய்த்து சுத்தம் செய்த கொடுமையை படித்திருக்கிறேன்.
இந்த கட்டுரையை எழுதும் இதே கணம் ஓய்வு பெற்ற ஓர் தாழ்த்தப்பட்ட அதிகாரியின் அலுவலகத்தை சாணம் தெளித்து சுத்தம் செய்த கொடுமை கேரளத்தில் நிகழந்திருப்பதாக தினமணி செய்தி வெளியிட்டிருக்கிறது. ( தினமணி  08 04 2011 )  இத்தனைக்கும் படித்தவர்களின் எண்ணிக்கை 2011 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்கூட  93.91 விழுக்காடு பெற்று மாநிலங்களிலேயே முதலிடம் வகிப்பது கேரள மாநிலமே.
 இந்த தேசத்தில் சாதீய களைகள் எத்தனை ஆழத்துக்கு வேர் விட்டிருக்கின்றன என்பதும் விடுதலை பெற்று ஏறதாழ 64 வருடங்கள் கழிந்த பின்பும் இந்த தேசத்துக்கு விடிவு ஒன்றும் ஏற்பட்டுவிட வில்லை என்பது ஒரு துயரமான செய்தியாக இருக்கிறது.
இந்த நேரத்தில் நான் அறிந்த சம்பவம் ஒன்றும் நினைவிற்கு வருகிறது. கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் குடிநீருக்காக வைக்கப் பட்டிருந்த தண்ணீர் பானையிலிருந்து தாகம் தீர்க்க தண்ணீர் குடித்த ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒரு கிளர்ச்சி வெடித்தது.தந்தை பெரியாரே முன்நின்று முடித்து வைத்த அந்த கிளர்ச்சிதான் பின்நாளில் திராவிட இயக்கம் தஞ்சை மண்ணில் வேர் ஊன்ற உதவியது என்ற தகவல் இன்றைய இளைய தலைமுறை அறிந்திடாத ஒன்று. அன்று அந்த கிளர்ச்சியில் முன்னின்ற ஒருசில மாணவர்கள் பின்னாளில் திராவிட இயக்கத்தின் அடித்தளத்தில் அங்கம் வகிக்க நேரிட்டது. தமிழகம் முழுதும்  இச்சீர்கேடுகளை எதிர்த்து அன்நாளில் தெருதெருவாக போராடியது இந்த மண்ணில் திராவிட இயக்கம் மட்டுமே என்பதை உணரவேண்டும்.

1949 ல் தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அண்ணாவும் அவர் தோழர்களும் திராவிட கழகத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. தமிழ் மக்களுக்கு சுயமரியாதையையும் பகுத்தறிவுச்சிந்தனைகளையும் போதித்த தந்தை பெரியார் பொருந்தாதிருமணமொன்றை ஏற்க நேர்ந்ததுதான் பிளவுக்கான காரணம் என்று அறிந்திருந்தேன்.
அண்ணாவின் விலகலுக்கு அதுமட்டும் காரணமல்ல என்பதை பின்நாளில்தான் உணரமுடிந்தது. ஆனால் அதுவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. சட்டப்படி வாரிசு அற்ற  தந்தை பெரியார் சொந்த இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் நம்பிக்கை இழந்தார். தனக்குப் பின்னால் தன் இயக்கத்தையும் சொத்துக்களையும் காக்கவேண்டிய அவசியமும் அவருக்கு ஏற்பட்டது. அதனால்தான் அன்நாளைய சட்டப்படி சர்ச்சைக்குரிய திருமணத்தின் மூலம் இரண்டுக்கும் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டார்.
அதேசமயம் ஜனநாயகத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்ட அண்ணா ஜனநாயகம் என்பதே இல்லாமலிருந்த திராவிட கழகத்தில் தொடர இயலாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவு அண்ணாவும் அவர்தம் தோழர்களும் திராவிட கழகத்திலிருந்து வெளியேறினர். இருந்த போதிலும் அண்ணாவுக்கும் தந்தை பெரியாருக்கும் ஏற்றுக்கொண்ட கொள்கைகளில் எந்த முரண்பாடும்   ஏற்பட்டுவிடவில்லை.
ஏற்ற தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் , அரசியல் அமைப்பில் அனைவருக்கும் சமபங்கு , அகில இந்தியா முழுதும் சீரான ஆட்சி , மொழிவழி பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் - இவற்றில் எந்த மாறுபாடும் அவர்களுக்கு ஏற்பட்டுவிடவில்லை. இருந்த போதும் இந்த கோட்பாடுகளுக்கு ஏற்றுக் கொண்ட செயல் வடிவம் மாறுபட்டதாய் இருந்தது.
சமூகத்தில் சமுதாயச் சீரழிவுகளை அகற்றும்போது அத்தனையும் சரியாகும் என்பது தந்தை பெரியாரின் கணிப்பு. ஆனால் பெரியாரின் கொள்கைகள் தமிழ் மண்ணில் வேர் பிடிக்க அரசியல் அமைப்பில் அங்கீகாரம் பெறப்படவேண்டுவது அவசியம் என்பது அண்ணாவின் கருத்தாயிருந்தது.
அதன் விளைவாக 1949 செப்டம்பர் 19 ல் திராவிட முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டு அன்று மாலை சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் நிகழ்ந்த கூட்டத்தில் திமுகவின் தோற்றம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியல் அரங்கில் திமுக வெற்றிகளைக் குவிக்கத்தொடங்கியது அனைவரும் அறிந்த கதைதான்.

1949 ல் திமுக வைத்துவக்கிய அண்ணா 1952 ல் தேர்தலில் பங்கேற்க அவசரப்பட வில்லை. அரசியலில் சனநாயக கோட்பாடுகளில் மிகுந்த மரியாதை வைத்திருந்த அண்ணா தேர்தலில் திமுக பங்கெடுப்பது குறித்து திருச்சியில் நிகழ்ந்த மாநில மாநாட்டில் உருப்பினர்களுக்கிடையே ஓட்டுப் பெட்டி வைத்தே முடிவெடுத்தார். ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் பேரியக்கத்தை வீழ்த்தி திமுக ஆட்சியை பிடிக்கப்போகிறது என்று எவரும் அறிந்திருக்கவில்லை. 67 ல் ஆட்சியை கைபற்றி அரசு அமைத்த போது அண்ணா ஆற்றிய உரை அதைத்தான் வெளிப்படுத்தியது. 1967ல் காங்கிரசிலிருந்து வெளியேறிய மூதறிஞர் இராசாசியை இணைத்துக்கொண்டு ஆட்சியைக்கைப்பற்றி காங்கிரஸ் இயக்கத்தை வெளியேற்றினார். அன்று வெளியறிய காங்கிரஸ் பேரியக்கம் இன்றுவரை முடமாக நின்றிருப்பதை காணலாம்.
ஆட்சியில் அமர்ந்த அன்றே சென்னை மாகாணமென்று கூறப்பட்ட பெயரை தமிழ் நாடு என்று மாற்றியமைத்தார் அண்ணா. தமிழ் நெஞ்சங்களின் நீண்ட நாளைய குறைந்தபட்ச கோரிக்கையை கூட அன்நாளைய காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றி  வைக்கவில்லை என்பதை        நினைவில் கொள்ள வேண்டும்.
ஓராண்டே ஆட்சிக்கட்டிலில் இருந்த அண்ணாவை இயற்கை எளிதாக திரும்பப்பெற்றுக்கொண்டது. சனநாயகத்தில் மிகுந்த பற்று வைத்திருந்த அண்ணா,    திமுகவின் அடித்தளத்தை அத்தனை வலுவாக அமைத்திருந்தார். இந்தியமண்ணிலேயே எந்தவொரு இயக்கத்துக்கும் அப்படியொரு வலுவான அடித்தளம் இருந்ததாக நினைவில்லை. 1962 ல் அண்ணா பாராளுமன்றத்தில் உறுபினராக இருந்தபோது பண்டித நேருவின் எச்சரிக்கைக்கு பதிலளித்த பாங்கு இங்கு நினைவு கூரத்தக்கது.
ஒருமுறை
உங்கள்  நாட்கள் எண்ணப்படுகின்றன   .your days are numberd !
என்று பாராளமன்றத்தில் திமுகவை பண்டித நேரு எச்சரிக்கிறார்.
அதற்கு அண்ணா
என்னுடைய காலடிகள் அளந்து வைக்கப்படுகின்றன. my steps are measherd ! அண்ணா பண்டிதருக்கு பதிலளிக்கிறார். .---
 அண்ணாவுக்குப்பின் பொறுப்பேற்ற கலைஞர் தந்தை பெரியாரும் அண்ணாவும் கண்ட கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருதலை கண்டுணரலாம்.
1962 ல் அண்ணா முதன் முதலாக மாநிலங்களவைக்கு தேர்வு பெற்று ஆற்றிய முதலுரையில் நான் நடைபாதையோரத்தில் உழன்று கிடக்கும் மனிதர்களுக்காக பேசவந்திருக்கிறேன் என்றே துவக்கினார். இன்றும் கலைஞரின் தொடர்ந்த அதே திசையில் பயணிப்பதை காணமுடியும். ஆட்சிக்கு வந்தால் படி அரிசி மூன்று ரூபாய்க்கு போடுவேன் என்றளித்த வாக்குறுதியை அண்ணாவால் நிறைவேற்ற முடியாமல் போயிற்று. அன்நாளில் அண்ணா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இன்று அண்ணாவுக்கு கலைஞர் புகழ் சேர்த்ததை கவனிக்க வேண்டும்.
1967 லிருந்து இன்றுவரை திமுக வின் அரசியல் சமுதாயம் மொழி சார்ந்த பணிகளை அன்நாளைய நிலைகளுடன் ஒப்புநோக்கினால் எத்தகைய மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணரக்கூடும்
.மனிதனை வைத்து மனிதனே இழுத்துச்சென்ற கொடுமையை இந்த சென்னை நகரில் கண்டவன் நான். கலைஞர் ஆட்சியில்தான் அத்தனை கை ரிக்ஷாகளும் சைக்கிள் ரிக்ஷாக்களாக உருமாறி மனிதனை மனிதனே இழுக்கும் இழிதொழில் தமிழகத்தில் ஒழிக்கப்பட்டது. தொழிலாளிகளுக்காக தோள் கொடுப்பதாக பரைசாற்றிக்கொள்ளும் இந்தியகம்யூனிஸ்ட்கள் ஆட்சி செலுத்திய மாநிலங்களில்கூட இந்த கொடுமை அகற்றப்படாமலேயே இருந்ததை கவனிக்க வேண்டும்.
இதனையே கலைஞரின் தலையாய பணியாக நான் கருதுகிறேன். அடுத்தடுத்து ந்துமுறை கலைஞர் கோட்டைக்குள் நுழைந்தபோதெல்லாம் இந்த தமிழ்ச்சமுதாயம் இந்த தேசத்துக்கே வழிகாட்டியாய் நிற்க நேர்ந்ததை மறந்திட முடியாது.
சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் இயக்கம் நாளடைவில் எத்தனையோ குட்டிகளை ஈன்றதை கண்டிருக்கலாம். இதில் திமுக வும் விலக்கல்ல என்பதும் வரலாற்று உண்மை. ஆனால் திராவிட கழகத்திலிருந்து திமுக பிரிய நேரிட்டது கொண்ட கொள்கைகளில் ஏற்பட்ட முரண்பாடல்ல. செயல்வடிவத்தில்  ஏற்பட்ட வித்தியாசங்களே. பின்நாளில் திமுக வில் ஏற்பட்ட விரிசல்களுக்கான காரணங்கள் பெரும்பாலும் தனிநபர்களுக்கு ஏற்பட்ட விபத்துகளே. அநேகமாக பெரும்பாலான விரிசல்கள் கலைஞரை மையப்படுத்தியே ஏற்ப்பட்டது ஒரு துரதிஷ்டம்தான். கலைஞரின் அசாத்திய
திறமை ஓய்வற்ற உழைப்பு அவரை உச்சிக்கு கொண்டு சென்றது. அவருடைய அசுரவளற்சி கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றோருக்கு அழுக்காறாயிற்று. அதன் விளைவே திமுக ஒருசில விரிசல்களை ஏற்க நேர்ந்தது .
1961 ல் அண்ணா காலத்திலேயே சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட ஈவெகி சம்பத் திமுகவைவிட்டு வெளியேறி தமிழ் தேசிய கட்சியை நிறுவினார். நெடுங்கால நாடாளமன்ற பணி , டெல்லி காங்கிரஸாரோடு ஏற்பட்ட இணக்கம்  தமிழ் தேசிய கட்சியை வெகு சீக்கிரத்தில் காங்கிரஸில் கரைத்தது.
1972 ல் மத்தியரசின் வருமானத்துறை புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரனை இறுக்கநேர்ந்தது. திமுக வின் செயலற்ற பொருளாளராய் இருந்த புரட்சிநடிகர் எம்ஜியார் தானே காட்டவேண்டிய கழகபொருளாளருக்கான கணக்கை கட்சியில் எழுப்பி கட்சியைவிட்டு  வெளியேறினார். மக்கள் சக்தியை பெருமளவு பெற்றிருந்த எம்ஜி ராமச்சந்திரன் அண்ணா திமுக என்ற கட்சியை ஏற்படுத்தி திமுகவுக்கே எதிராக விட்டுச் சென்றார்.
1993 ல் உணர்வுகளுக்கும் வெரும் மனக்கிளற்சிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த வை கோபால்சாமி திமுகவைவிட்டு பிரிய நேர்ந்தபோது திமுகவிலிருந்து ஒரு வலுவான இளைஞர் சக்தி அவருடன் பயணித்தது. இயக்கத்தை தொடர்ந்து நடத்த தேவையான சாதுர்யமும் நிதானமும் அற்ற கோபால்சாமி உணர்வுகளுக்கும் மனக்கிளர்ச்சிகளுக்கும் மட்டுமே இடம் கொடுத்து இளைஞர் எழுச்சியை வழிநடத்தும் திறனின்றி திகைத்து நிற்பதை இன்றும் காணலாம்.
இவையனைத்துக்கும் தலையாய காரணம் தனிமனிதற்கிடையே ஊடுருவிய அழுக்காறே. அத்தனைக்கும் காரணமாக கலைஞர் அமைந்தது துரதிஷ்டம்தான்.  1949 ல் திமுக தோன்றியபோது அண்ணாவின் பின்னால் அணிவகுத்த தலைவர்கள் வரிசையில் நான்காவதாக நின்றிருந்தவர் கலைஞர்.
கழகத்தில் கலைஞரின் பணி அசாத்தியமானது. கொடுத்த பணியை திறம்பட முடித்து அண்ணாவிடம் நெருக்கம். ஓயாது சுழன்று கழகப்பணியில் தொண்டர்களிடத்து நெருக்கம். எழுத்திலும் பேச்சிலும் அனைவரிலும் முன்னின்று மக்களிடையே நெருக்கம் . நின்ற தேர்தலிலே அனைத்திலும் வெற்றிவாகை சூடி ..அண்ணாவுக்குப்பிறகு முதலிடத்துக்கு நகர்ந்த பாங்கு ...உயர்கல்வி எதனையும் பெறாத கலைஞருக்கு ஏற்பட்ட இந்த வளற்சி கழகத்தின் பிற முதுகலை பட்டதாரிகளுக்கு தீராத அழுக்காறாயிற்று. எழுத்திலும் பேச்சிலும் பின்னுக்கு தள்ளப்பட்ட அரசவைக்கவிஞர்களுக்கும் சொல்லின் செல்வர்களுக்கும் மாறாத அழுக்காறாயிற்று. இவையே கழகத்துக்கு ஏற்பட்ட விரிசல்களுக்கு தலையாய காரணமாக நான் கருதுகிறேன்.
ஏறதாழ 62 வருடங்கள் காணாமற் போய்விட்டது. திராவிட இயக்கத்தின் மேல் மக்கள் வைத்த நம்பிக்கை கடுகளவும்  பொய்த்துப் போகவில்லை. தமிழ்நாடு இன்று இந்த மண்ணில் தலை நிமிர்ந்துதான் நிற்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது எத்தனையோ முன்னேற்றங்களை பெற்றிருக்கிறது.
மக்களிடையே கல்வியறிவு உயர்ந்திருக்கிறது. நகரங்களும் கிராமங்களும் தூய்மை பெற்றிருக்கின்றன. குளம் குட்டைகளில் குளித்தவர்கள் இன்று குழாய் நீரில் குளிக்கிறார்கள். ஆண்களைவிட இப்போதெல்லாம் பெண்கள் அதிகமாக பணிக்கு செல்வதை காணமுடிகிறது. கிராமத்து சாலைகள் கண்சிமிட்டுகின்றன. மூன்று லட்சம் பேர்களுக்கு மேலாக வேலை கிடைத்திருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் வேலைக்கு ஆட்களே கிடைப்பதில்லை.  மின் வெட்டு மட்டும் வயிற்றை கலக்குகிறது.
நவீன யுகத்தின் கண்டுபிடிப்புக்களை இப்போது அனைத்து மக்களும் பரவலாக பெற்றிருக்கிறார்கள். தமிழன்னை இணையத்தில் வலம் வருவதைக்காணமுடிகிறது. மொத்தத்தில் தமிழ் சமுதாயமும் இந்திய தேசமும் இன்றைய உலகத்தில் தவிற்க இயலாத ஒன்றாகியிருக்கிறது.
திராவிட இயக்கத்தின் தூண்களாக கருதப்பட்ட பெரும்பாலான தலைவர்களில் என் கண்களுக்கு கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் மட்டுமே மிச்சமிருப்பதாக தோன்றுகிறது. ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் ஆற்றிய பணி தமிழக வரலாற்றில் பொன்எழுத்திட்டு போற்றத்தக்கது. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் கண்டகனவுகளுக்கு அங்கீகாரம் ஏற்படுத்தி நிஜமாக்கியவர்கள் இவர்களே!
நாணயத்தின் அடுத்த பக்கம் அத்தனை சுவாரசியமாக இல்லை. தலைவதிக்கு மருந்து உண்டபோது திருகு வலியை ஏற்படுத்திக்கொண்டது தவிற்கமுடியாதாயிற்று. இயற்கையை மிஞ்சிய மனித செயல்கள் அத்தனைக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் இருந்ததில்லை. வயலுக்கு இறைத்த நீர் விழலுக்கும் உணவாயிற்று. கல்விக்கண்ணை திறந்தபோது அசலுக்கு எதிராக நகலை நிறுத்த முயன்றனர்.
கொடூரமாக கொலை செய்தவன் நிரபராதி என்று உயர்கல்வி வாதிடுகிறது . இல்லாத வியாதிக்கு மருத்துவம் பாற்கபடுகிறது. கையூட்டு என்ற சொல்லுக்கு வெகுமதி என்று பொருள் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒருசில வேட்பாளர்களே லட்சாதிபதியாக இருந்ததாக நினைவு. தப்பித்தவறி சுயேட்சை வேட்பாளர்களில் எவராவது வசதியாய் இருந்திருக்கக்கூடும். ஆனால் இன்று தேர்தலில் 234  தொகுதிகளில் போட்டிடுகிற வேட்பாளர்களில்  240  பேர் கோடீஸ்வரர்களாம்.
இதில் ஆளும் கட்சி எதிர்கட்சி சுயேச்சை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தலித் விடுதலலைக்கு போராடும் இயக்கத்தின் வேட்பாளரும் இதில் அடக்கம் என்பதுதான் வியப்பு தரக்கூடியது.
அரசியலில் அத்தனை எளிதாக பணம் கொழிக்கிறது. உலகலாவிய கலாச்சார மாற்றத்தின் விளைவே என்று கருதுகிறேன்.
திமுக தோன்றியபோது பெருவாரியான ஜனத்திரளைத்திரட்ட அண்ணா பெரியாரின் அழுத்தமான கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள நேரிட்டது. அதன் விளைவாக தேசமெங்கும் இறைந்து கிடந்த கையூட்டு கலாசார சீர்கேடு திமுக வையும் விட்டு வைக்கவில்லை.
இதனை க்கருத்தில கொண்டே தந்தை பெரியார் தன் இயக்கம்  தேர்தலில் பங்கெடுப்பதை அறவே தவிற்தார். திமுக தேர்தலில் பங்கெடுப்பது என்ற முடிவை மேற்கொண்ட போது தனது குடியரசு இதழில் எழுதுகிறார்.
இப்படிப்பட்ட காந்தியின் சிஷ்யர்களின்ஆட்சியே சந்தி சிரிக்கிறது என்றால் நம் கழகத்தை சார்ந்த இந்த சமய சஞ்சீவிகளின்ஆட்சிமட்டும் எப்படி யோக்கியமான ஆட்சியாக இருக்க முடியும். இவர்களை சட்ட சபைக்கு இழுத்து விட்டால் காந்தியாரின் சீடர்களை விட மேலும் மோசமாகத்தானே இவர்கள் நடந்து கொள் வார்கள்.
நீதிக்கட்சி தேர்தலில் நின்றுதான் பதவி வேட்டையாடி கெட்டழிந்தது. அந்த தவறு மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்று.....
-- குடியரசு ... செப்டம்பர் 24
இன்று ஏற்பட்டிருக்கும்  நிகழ்வுகள் அதைத்தான் போதிக்கிறது. இருந்தபோதும் தந்தை பெரியாரின் தனித்த சிந்தனைகள் அண்ணாவின் அரசியல் சமரசத்தால் மட்டுமே தழைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
இடுகை  048

2 கருத்துகள்:

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !