புதன், ஜனவரி 26, 2011

எழுத்துச் சுரண்டல் !

                                பாண்டியன்ஜி
கடந்த 17 ஆம் தேதி முடிந்துபோன 34 வது சென்னைப்புத்தகக் காட்சியில் நான்கய்ந்து புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கினேன். பெரும்பாலும் உலக வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கும் புத்தகங்கள்தாம். இயல்பாகவே மண்ணின் சரித்திரங்களையும் மொழியின் எழுச்சியையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவனாகவே இருந்திருக்கிறேன்.புதினங்கள் மீது நான் கொண்டிருந்த மிகுதியான ஆர்வமே கூட என் ரசனைக்கு தலையாய காரணமாக இருக்கக்கூடும்.
நான் வாங்கிய நூல்களில் இரண்டு சென்னையைச்சேர்ந்த கிழக்கு பதிப்பகம் வெளியிட்டவை. இரண்டுமே நான் மிகுதியாக அறிந்து கொள்ள ஆவலைத்தூண்டிய தனிமனித சாகசங்களை அடிப்படையாக கொண்டவை.ஒன்றை ரைட்டர் முகிலும் மற்றொன்றை ரைட்டர் மருதனும் எழுதியிருந்தார்கள். ஏரத்தாழ 180 பக்கங்களில் எழுதப்பட்ட அந்த நூல்கள் இரண்டுமே என் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.   மிகுந்த எமாற்றத்தையே அளித்தது.இந்த நூல்கள் இரண்டுமே அயல் மொழிகளில் சுயமாக எழுதப்பெற்ற படைப்புகளின் மொழிபெயற்பாக இருக்கக்கூடும் என்றே எண்ணியிருந்தேன்.இந்த நூல்களைப்பார்த்த பிறகு படைப்பிலக்கியத்தில் தவறான ஒரு பாதை காட்டப்பட்டு விட்டதாகவே எனக்குத் தோன்றியது. இது போன்ற நூல்களை வேறு பல பதிப்பகங்களும் பதிப்பித்திருக்கக்கூடும்.
இந்த புத்தகத்தின் நான்காவது பக்கத்தில் பதிப்பு சார்ந்த தகவல்களுடன் வழக்கமாக அச்சிடப்பெரும் வாக்கியங்களும் இடம் பெற்றிருந்தது.

all wrights relating to this work rest with the copyright holder.except for reviews and
quotations,use or republication of any part of this work is prohibited under the copyright act,without the prior written permission of the publisher of this book

பெரும்பாலும் இது போன்ற மிரட்டல்கள் மற்றவர்களுக்குத்தான்.  மற்றபடி இதில் சொல்லப்பட்டநேர்மை நூலைப்படைத்த ஆசிரியற்கல்ல என்பதை அறிந்தே இருக்கிறேன். பக்கங்களைப் புரட்டி இறுதிக்கு வரும்போது.. அங்கேயும் சில சான்றுகள் தரப்பட்டிருக்கின்றன.   அதாவது அவர்
ஆக்கிய நூலுக்கு அடித்தளமாக அமைந்த இருபதுக்கு மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களின் பெயர்கள் அதன் சுய படைப்பாளிகளின் நாமத்துடன் தரப்பட்டிருந்தது.   இதுமட்டுமன்றி பல்வேறு 
இணையதள முகவரிகளும் இணைக்கப்பட்டிருந்தது.
முன்னால் தரப்பட்டிருக்கும் எச்சரிக்கைக்கும் இறுதியில் இணைக்கப்பெற்ற தகவல்களுக்கும் இடைப்பட்ட பக்கங்களில் படைப்பாளி கதை புனைகிறார். பின்னிணைப்பில் இடம் பெற்ற படைப்பாளிகள் எவரும் தம் வரிகளுக்காக ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது என்பதை ஆசிரியர்
நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
பல்வேறு நூல்களிலிருந்து தகவல்களைத்திரட்டி ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்ல எழுதப்பட்டு கல்லூரிகளிலும் ஆய்வரங்கங்களிலும் சமர்ப்பிக்கப்பெரும் ஆய்வுக் கட்டுரைகள் பற்றி கேட்டிருக்கிறேன்,
அதுமட்டுமன்றி..
ஒரு நூலின் பல்வேறு பகுதிகளை தனித்தனியாக பிய்த்தெடுத்து அணுவணுவாக ஆய்ந்து எழுதப்பெரும் திறனாய்வுக்கட்டுரைகளை கண்டிருக்கிறேன். 
சரித்திரத்தில் பதிந்துவிட்ட இரண்டொரு தடங்களைப்பற்றி கதைகள் புனையப்படுவதை படித்திருக்கிறேன்.
அயல் மொழியில் ஆக்கப்பெற்ற மொழிச்செல்வங்களை தன் மண்ணுக்கு கொணர வேர்கள் சிதையாமல் அசலுக்கு ஊறு நேராமல் மொழி பெயற்கப்படுவதை பார்த்திருக்கிறேன்.
அந்த வகையில் இந்த நூல்களை எந்த வகையில் சேர்க்கக்கூடும். இதுவும் ஒரு வகைச் சுரண்டலல்லவா.  மகாகவி பாரதி தன் கனவுகளில் ஒன்றாக உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அயல் மொழிச்செல்வங்கள் வேருடன் கொணர வேண்டுமென்பதும் ஒன்று.  அப்படிக் கொண்டுவருவது கஜினி முகமது போல் கெள்ளையடித்தல்ல என்பதை உணர வேண்டும். 
தமிழ்த்திரைப்பட உலகில் ஒருகாலத்தில் இது போன்ற வழிமுறை ஜெமினி பிக்சர்ஸ் மற்றும் தேவர் பிலிம்ஸ் நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தது. தனியொரு எழுத்தாளனின் கதையை படமாக்கும்போது என் கதை உன்கதை என்று வழக்குகளை வீணாக சந்திக்க நேருவதைத் தவிற்கவோ என்னவோ தாங்களே அய்ந்தாறு கதைசொல்லிகளை கதை இலாக்காவாக வைத்து கதைகளை உருவாக்கியதைக் கண்டிருக்கிறேன்.  இவ்விலாக்காகளின் கதையை எதிர்த்து எவரும் வழக்கு எதனையும் போடமுடியாமற் போனதையும் பார்த்திருக்கிறேன்.
வழக்கமாக உரையாடல்களில் வெளிப்படும் கருத்துக்களும் தின வார மாத இதழ்களில் பிரசுரிக்கப்பெரும் கூற்றுகளும் அழுத்தமான ஆதாரங்களைக் கொண்டவையல்ல.   அதே சமயம் அச்சிட்டு 
வெளியிடப்பெரும் நூல்களின் நிலை அப்படியல்ல.
நூல்களில் நிரம்பியிருக்கும் கருத்துக்கள் அதிகாரபூர்வமான ஆவணங்களாகவே கொள்வதற்கு சாத்தியமாயிருந்தது. அதற்கான மூலகாரணம் பதிப்பாளர்களின் மொழியறிவும் நேர்மைத்திறனுமே.
பெரும்பாலான பதிப்பாளர்கள் அன்நாளில் கேடு விளைவிக்கும் நூல்களுக்கும் திருடப்பட் எழுத்துக்களுக்கும் வாய்ப்பு வழங்கியதே இல்லை. புத்தகங்களின் தரம் காப்பாற்றப்பட்டே வந்திருக்கிறது.அதற்கான தகுதியும் திறனும் பெரும்பாலான பதிப்பாளர்கள் பெற்றே இருந்திருக்கிறார்கள்.ஆனால் இன்று ..
நூல்கள் சார்ந்த பரந்த அறிவும்,சமூகம் சார்ந்த கண்ணியமும் இன்றைய பதிப்பாளர்களிடம் காண்பது அறிதாகவே இருக்கிறது அல்லது அறிந்தே பெருவணிகம் கருதி மரபற்ற செயல்களை ஊக்கிவைக்கிறார்கள் என்றே கருதுகிறேன். ஓரளவு தமிழில் சுயமாக எழுதவும் கணிசமான ஆங்கில அறிவும் இருக்கிற போது இது போன்ற நூல்களை வெளியிட போதுமானது என்றே கருதுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.
சமீபத்தில் இன்னொரு உரையாடலையும் படிக்க நேர்ந்தது.

நான் என்றுமே படைப்பாளிகளின் உரிமையில் குறுக்கிட்டதில்லை. ஒரு சமயம் பத்திரிக்கை நிறுவனமொன்றில் பணியாற்றியபோது இன்றைய சாகித்திய அகாதமியின் பரிசு வென்ற படைப்பாளி
நாஞ்சில் நாடனின் சிறுகதையை வாசிக்காமலேயே அச்சுக்கு அனுப்பி விட்டேன்.  அதற்காக அந்த நிறுவனத்தின் கடுமையான கண்டனத்துக்குள்ளாக நேர்ந்தது...

கவிஞரும் உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளருமான திரு மனுஷ்யபுத்திரனின் சுயவிமர்சனமே அந்த உரையாடல். வாசிக்காமல் ஒரு படைப்பை அச்சுக்கு அனுப்பியது எத்தனை பெரிய தவறு என்பது என்னால் உணர முடிகிறது.  படைப்பாளிகளின் படைப்புக்களில் குறுக்கிடுவதில்லை என்பது உயர்ந்த விஷயமே .  இருந்தபோதும் படைப்பாளிகளின் படைப்பு சுயமானதென்றும் கண்ணியமிக்கதென்றும் தான் சார்ந்திருக்கும் நிறுவனத்துக்கு ஊறு தராதவை என்பதும் படைப்பை படித்தறியும்போது மட்டுமே அறியமுடியும்.
நீங்கள் கொண்டிருக்கும் உயரிய நோக்குதான் சமீப காலங்களில் உயிர்மை இதழில் ஒருசில வக்கிரமான எண்ணங்களை வெளிப்படுத்தும் எழுத்துக்களை நுழைக்கிறது என்றே கருதுகிறேன்.
.......................................
இடுகை 0039 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !