வெள்ளி, ஜனவரி 08, 2010

கல்விக்களஞ்சியமாக உருவெடுக்கும் பெரம்பலூரிலிருந்து. . . .

மண்ணின் மைந்தர்களே ஒரு கணம் சிந்திப்பீர்
இளநெஞ்சங்களே !
இரண்டொரு நாட்களுக்கு முன் அலுவல் நிமித்தமாக பெரம்பலூர் செல்ல நேரிட்டது. அங்கு ஒரு காலைப்பொழுதில் துறையூர் நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டேன். அப்போது சுவாமி திரையரங்கு முன் நான் கண்ட காட்சி என்னை திகைப்பில் ஆழ்த்தியது. சமீபத்தில் திரையிடப்பெற்ற அசல் திரைப்படத்தின் வானுயர்ந்த கட்டவுட் உயர்ந்து காணப்பட்டது தல என்று சுறுங்க வருணிக்கப்பட்ட திரை நாயகன் அஜித் உயர்ந்து காணப்படுகிறார். அவரின் காலடியில் சுமார் 20 குட்டித்தலைகள் சிதறி கிடக்கின்றன. இதை காணும்போது எனக்கு எப்போதோ பார்த்து ரசித்த இந்தி திரைப்படம் ஹாதிம் தாய் நினைவுக்கு வந்தது. ஒரே மாறுபாடு. குட்டித்தலைகள் மரத்தின் கிளைகளில் தொங்குவதற்கு பதில் தரையில் கிடந்தன. ஒவ்வொரு தலையும் யாருக்கு உரியன என்று அச்சிடப்பெற்றிருந்தது. அவர்கள் வகிக்கும் ரசிகர் மன்ற பதவிகளும் இடம் பெற்றிருந்தன. இதில் இன்னும் வியப்பிற்குரியது அனைவருமே கலை அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் முது நிலை பட்டதாரிகள். கட்டவுட்க்கான செலவுகளையும் அவர்கள்தான் ஏற்றிருக்கவேண்டும் . இதைக்காணும் ஒவ்வொரு பெற்றோரும் வெட்கித் தலை குனிவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும். இந்த நாட்டின் இளைஞர்களுக்கு எத்தனையோ பொறுப்புகளும் பதவிகளும் காத்திருக்க இவர்கள் தேடிக்கொண்டிருக்கும் பொறுப்புகளை சற்று கூர்ந்து பாருங்கள். கல்விக்கூடங்கள் மலிந்துகிடக்கும் பெரம்பலூர் நகரத்தில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. நாட்டின் பலபகுதிகளில் இருந்து எண்ணற்ற மாணவர்கள் இவ்வூர் கல்வி நிலையங்களில் கல்வி பயில கூடியிருப்பதை மண்ணின் மைந்தர்கள் கவனிக்கவேண்டும் வருங்கால இளைஞர்களிடமிருந்து இந்த நாடு ஏராளமாய் எதிர் பார்க்கிறது. அருள் கூர்ந்து இந்த நாட்டையும் ஏமாற்றி தங்களையும் ஏமாற்றி கொண்டுவிடாதீர்கள்
கட்டவுட்களுக்கு பாலபிஷேகம் செய்வதை தவிர்த்து கட்டவுட்களில் கவுரவமாக இடம்பெற முயலுங்கள்.
நிழல்களைத்தவிர்த்து நிஜங்களாக வாழ்ந்து காட்டுங்கள்.
போலிகளிடமிருந்து விலகி அசல்களாக வாழ முயலுங்கள்.
--------------------------------------
பாண்டியன்ஜி
இடுகை 0006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !