ஞாயிறு, டிசம்பர் 25, 2016

மரங்களோடு ஒரு மல்யுத்தம் !

 ( சென்னை புற நகரொன்றில்  வார்த்தின் ஜல்லிக்கட்டு

வில்லவன்கோதை


கடந்த  டிசம்பர்  பன்னிரண்டாம்  தேதி காலை எட்டு மணியளவில் நூங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு மருத்துவ ஆய்வுக்காக போகவேண்டியிருந்தது. அதற்கான முன் பதிவும் இணையத்தில் செய்திருந்தேன். அதற்கு முந்தய நாட்களில் அனேகமாக வரப்போகிற வார்த் புயலை அடையாளம் காட்டி வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுத்து  வந்தது. ஒருவகையில் வானிலை ஆய்வு மையம் மிரட்டி வந்தது என்று கூட சொல்லலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆந்திரத்தை நோக்கி அவசரமாக விரைந்து சென்றதாக சொல்லப்பட்ட  வார்த் புயல் என்ன காரணத்தாலோ பின்னோக்கி நகர்ந்து டிசம்பர் பன்னிரண்டாம் ஆம் தேதி காலை சென்னையைத் தாக்கக்கூடுமென்று குறிப்பான அறிப்புகள் அடுத்தடுத்து வரத்துவங்கிற்று. இது மாதிரியான சமயங்களில் வழக்கமாக உறக்கத்தில் இருக்கும் நம் மாநில அரசுகூட இந்த வார்த் புயலை  எதிர்கொள்ள காத்திருந்ததாக கேள்வியுற்றேன். இந்த வருட ஆற்காடு பஞ்சாங்கத்தில் கூட இப்படியொரு இயற்கைச் சீற்றத்திற்கான  அறிகுறியை  முன்னதாகவே கணித்திருந்தார்கள் என்றெல்லாம் ஒருசிலர் சொல்லிக் கொண்டிருந்ததையும் அறிந்திருந்தேன். இருந்தபோதும் இதையெல்லாம் நான் பெரிதாகக் கொள்ளவில்லை. எப்போதுமே எதிலும் மெய்ப்பொருள் காண்கின்ற ஜாதியைச் சேர்ந்தவன் நான்.

பெரும்பாலான நாட்களில் சென்னை நகரெங்கும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிய போதும் இந்த புறநகர் பகுதிகளில் சுள்ளென்று வெயிலெரித்ததை நான் பார்த்திருக்கிறேன். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் வரப்போகிறது , இதோ வந்துவிட்டது என்றெல்லாம் வானிலை வல்லுனர்களால்  கூர்ந்து நோக்கப்பெற்ற  நடா புயல் கடைசியில் வராமலேயே வலுவிழந்து போனதையும் பார்த்திருந்தேன்.
நாளை காலையில் மழையும் காற்றும் இயல்பாக இருந்தால் திட்டமிட்டபடி நூங்கம்பாக்கம் போகலாம்... பேரன் கவினையும் இரண்டு கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் பள்ளிக்கு தைரியமாக அனுப்பிவைக்கலாம். ஒருவேளை வானிலை ஆய்வு மையம் சொன்னதுபோல காற்றழுத்த தாழ்வு மண்டலம் தகறாறு எதற்கும் முற்பட்டால்  பிறகு பார்த்துக்கொள்ளலாம்  என்ற முடிவுடன் படுக்கைக்கு போனேன்.
மறுநாள் காலை பொழுது விடிந்தபோதும் பெரிதாக பேசப்பட்ட விருந்தாளி வார்த்தின் வருகைக்கான எந்த அறிகுறியும் இந்த புறநகரில் தென்பட்டு வில்லை.அதேசமயம் சென்னை நகரின் பல பகுதிகளில் பலத்த சூரைக்காற்றுடன் பெருமழை பொழிவதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்துக்கொண்டிருந்தன.
மணி பதினொன்றாயிற்று.
வார்த்தின் வருகைக்கான அறிகுறிகள் ஏதாவது தென்படுகிறதா என்று அறிய வாசலுக்கு வந்து ஆகாயத்தை ஆராய்த்தபோது எங்கிருந்தோ இரண்டு தண்ணீர்த்துளிகள் முகத்தில் விழுந்து சிதறியது. இதுவரை பளிச்சென்றிருந்த வானம் மெல்ல மெல்ல நிறம் மாறி மங்கத்தொடங்கிற்று. மண்ணின் மணத்தோடு மெலிய காற்றும் முகத்தில் படர்ந்தது. அடுத்த ஒரு மணிநேரத்தில்  உடல் முழுதும் எதிர்பாராத குளுமை பரவியதையை உணர்ந்தேன்.




பகல் மணி பன்னிரண்டைத் தாண்டிற்று. இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிய மழைத்துளிகள் மாறி இப்போது பரவலாக பூமழை பொழியத்துவங்கிற்று நிச்சயமாக இது வார்த்தின் வருகைக்கான முன்னறிவிப்புதான் என்று என் உள் மனது உணர்ந்தது. இருந்தாலும் ஒரு வீரியமான புயலுக்கு இங்கே சாத்தியமில்லை என்றே நான் எண்ணினேன்.

 இதற்கிடையே மாலை  மூன்று மணியளவில் சென்னை நகரை சின்னாபின்னமாக்கி வார்த் புயல் ஒரு வழியாக கரையை கடந்து விட்டதாக தொலைக்காட்சி செய்திச்சானல்கள் தெரிவித்தன. அதனுடைய தாக்கம் அடுத்த சிலமணிகளில் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கடுமையாக எதிரொலிக்கக் கூடுமென்ற  கூடுதல் எச்சரிக்கையும் தரப்பட்டது.
              நேரம் செல்லச்செல்ல பூமழை பேய் மழையாக மாறி சூரைக்காற்றுடன் சேர்ந்து கொண்டது. வீதியெங்கும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த பசுமையான மரங்கள் காற்றின் தீவிரத்துக்கு ஈடு கொடுத்து  நின்றன. வீட்டிற்கு எதிர் திசையில் உயர்ந்து நின்றிருந்த ஒற்றைத் தென்னைமரம்  சூரைக்காற்றின் வேகத்துக்கு ஏற்ப தலை விரித்தாடிற்று.
காங்ரீட் வீதிகளில் மழைநீர் நிரம்பி வீடுகளின் வாயிற்படிகளில் ஏறத்துவங்கின. மணி அய்ந்தைத் தொட்டபோது வீட்டையொட்டிய தெற்குவீதியிலிருந்த லேத் ஷாப் செல்வம் கதவைத்தட்டினார்.
‘’ மரம் ரொம்ப ஆடுது . என்னேரமும் வீட்டின் மேல் சாயலாம் கொஞ்சம் கவனமா இருங்க..’’
மழை நீர் சொட்ட சொட்ட குடையுடன்  நின்றிருந்த செல்வம் நினைவூட்டினார்.
சற்றும் எதிர்பாராத பேரதிர்ச்சி எங்கள் முகங்களை தொற்றிக்கொண்டது.. அப்போதுதான் வீட்டின் வலதுபுறம் சுவற்றையொட்டி உயர்ந்து ஒய்யாரமாய் நின்றிருந்த அந்த பெரும்மரத்தை பார்த்தோம். இரண்டடி அகலமும் தொண்ணூரடி உயரமும் கொண்ட அந்த மரம் பரவலாக கிளைபரப்பி அந்த நாற்சந்திக்கே குடைபிடித்து நின்றது. ஏறதாழ நாற்பது வருஷத்துக்கு மேலாக எத்தனையோ பெரும் புயல்களுக் கெல்லாம் ஈடு கொடுத்து கம்பீரமாக நின்றிருந்த அந்த பெரும் மரம் இந்த வார்துக்கு பதில் சொல்ல முடியாமல் கிழக்கும் மேற்குமாக அசைந்து கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் அது எங்கள் கட்டிடத்தின்  மேல் சாயக்கூடும்  என்று எண்ணியபோது விட்டிலிருந்த ஒவ்வொருவரையும் பீதி கைப்பற்றிக்கொண்டது. வீட்டின் முதல் தளத்தில் குழத்தை சித்தார்த்துடன்  ஒரு இளம் குடும்பம் வாடகைக்கு இருந்தது. இரண்டாவது தளத்தில் இருந்த இன்னொருகுடும்பம் அதிர்ஷ்ட்டவசமாக சமீபத்தில்தான் காலி செய்திருந்தது. வாயிலை ஒட்டியிருந்த ஒரு கண்ணாடிக்கதவை லேசாக திறந்து மரத்தின் அசைவுகளை உன்னிப்பாக கண்காணிக்க ஆரம்பித்தேன்.
நேரம் செல்லச்செல்ல காற்றின் பேயாட்டம் குறைந்தபாடில்லை. மேற்தளங்களின் கண்ணாடிக்கதவுகள் காற்றின் விருப்பத்திற்கேற்ப  படார் படார் என்று மோதி பேரொலி  எழுப்பின.
மணி ஆறைக்கடந்தபோது  சாலையின் எதிர் திசையில் நின்றிருந்த ஒதிய மரம்  ஒன்று எதிர்பாராத பேரிரைச்சலோடு தெருவின் குறுக்கே சாய்ந்தது
அடுத்த அரை மணிநேரத்தில் வீட்டை ஒட்டி ஆடிக்கொண்டிருந்த  வானளாவியமரமும்   தன் பிடிமானத்தை இழந்து ஹோ வென்ற பெருஞ் சத்தத்தோடு கிழக்கே சாய்ந்த போது , எங்கள் அடுக்கு மாடிக்கட்டிடம் அப்படியே தாங்கிக்கொண்டது. மண்ணுக்கு அடியே பரவிக்கிடந்த அதனுடைய பரந்த வேர்கள் முழுவதும் வெளிப்பட்டு தன் இயலாமையை காட்டிற்று. ஒருவழியாக முடிவுக்கு வந்த ஒரு பெருந்தோல்வியை கண்ணெதிரே கண்டபிறகு சற்று பயந்தெளிந்து படுக்கைக்கு போனோம்.
முழுமையான உறக்கம் எளிதாகவில்லை.ஏதேதோ சிந்தனைகள் நினைவைக்கிளற  கண்விழித்தபோது மணி நான்காயிருந்தது. வார்த் புயல் தன் ஆட்டத்தை முடித்துக்கொண்டு மேற்கே நகர்ந்திருக்க வேண்டும்.
வாயிலுக்கு வந்து வானத்தை நிமிர்ந்து பாத்தேன். இந்த நகரில் அடர்ந்த மரங்களிடையே ஆகாயம் எப்போதுமே கண்களுக்கு சாத்தியப்பட்டதில்லை.ஆனால் இன்று வானம் வெட்ட வெளியாய் கண்களுக்கு பட்டது. அளவில் மிகப் பெரிதான வழக்கத்தைவிட மிகப்பிரகாசமான முழு நிலவு மேல் திசையில் காணப்பட்டது. மரங்கள் வரிசை வரிசையாக கோலோச்சிய இந்த மறைமலை நகரியம் மொட்டை கோபுரங்களின்  பெரு நிழல்களாக காட்சி தந்தது. எதை எதையோ தனிப்பட்ட முறையில் இழந்துவிட்டதைப்போன்ற உணர்வுடன் படுக்கையில் புறண்டேன்.
மீண்டும் கண்விழித்தபோது பொழுது புலர்ந்திருந்தது.
வாயிலுக்கு வந்தேன்
‘’ என்ன தாத்தா ஒரே பாரஸ்ட் மாறி இருக்குது.’’  
என்னைத்தொடர்ந்து  ஓடிவந்த பேரன் கவின் என்னைப்பற்றிக்கொண்டான்.அடர்ந்த பெருங்காடுகளை அவன் சுட்டி டிவியில்தான் பார்த்திருக்க வேண்டும்.
வீட்டுக்கு தென்மேற்கே நின்றிருந்த வான்முட்டும் மரமும் சரியாக கிழக்கு பக்கம் வாழ்ந்திருந்த இன்னொரு மரமும் வார்த் புயலிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தன.அந்த இரு மரங்களும் வீதியின் இரு புறமும் கால்வைத்து இறங்குதற்கு கூட இடமின்றி பரந்த கிளைகளை பரப்பி சடலமாக கிடந்தன. எதிர் வரிசையில் இருந்த வணிக நிறுவனங்கள் எதுவும் எளிதாக கண்களுக்கு புலப்படவில்லை. குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறக கிடந்த அந்த பெருங்கிளைகளுக்கிடையே புகுந்து புகுந்து போன ஒருசில இளைஞர்களையும் சிறுவர்களையும் பார்த்தேன். நகரின் பல்வேறு சாலைகளிலும் இதே நிலைதான் என்பது அவர்களது உரையடல்கள் உணர்த்திற்று.
ஊரே வாய்மூடி அமைதியில் உரைந்திருந்தது. பெரும்பாலான மின்கம்பங்கள் முறிந்து அலுமினிய கம்பிகள் விழுந்துகிடந்த மரக்கிளைகளுக்கு பாதுகாப்பாக இறுகிக்யிருந்தன. தெரு திருப்பத்தில் உயரத்தில் உட்கார்ந்திருந்த உயர் அழுத்த மின்மாற்றி ஒன்று தலைகுப்ற சிதறிக்கிடந்தது.அடுக்கு மாடிகளின் உயரத்திலிருந்த தண்ணீர்த்தொட்டிகளின் காங்ரீட் மூடிகள் வீதிகளோரத்தில் வீசப்பட்டிருந்தன.
கடைவீதிகளில் வணிக விளம்பர தட்டிகள் தூக்கி வீசப்பட்டு எங்கெங்கோ உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. விடாது மூன்று மணி நேரத்துக்கு மேலாக  தொடர்ந்து சுழற்றியடித்த சூறாவளி இந்த எழில் நகரத்தை சின்னா பின்னமாக்கியிருந்ததைப்  பார்த்தேன்.
மணி ஒன்பதை எட்டியபோது வலது பக்கத்து வீதியைச்சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருந்தாளுனர் ஸ்டான்லி ராமச்சந்ரன் ,தெரு இளைஞர்களைத் திரட்டி வாகனங்கள் வந்து போவதற்கான வழியை முதன்முதலாக ஏற்படுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்வதறியாத நின்றிருந்த வேறு பல இளைஞர்களும் நடுத்தர வயதினரும் தங்களை இணைத்துக்கொண்டனர். துண்டுதுண்டாக வெட்டப்பட்ட கிளைகள் ஓரங்களில் ஒதுங்கின. பிறகுதான்  இந்த நான்கு முனை சந்திப்பில் மெல்ல மெல்ல வாகனங்கள் ஊடுருவ முற்பட்டன.
அதற்கு பிறகே அரசு ஊழியர்கள்  முன்னாள் நகரத்துணைத்தலைவர் திரு ஜெ சண்முகம் தலைமையில் களத்துக்கு வந்தனர்  அடுத்த நாள் ஈரோடு நகரிலிருந்து பத்துக்கு மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் குழுவாக ஒரு வாகனத்தில் வந்திறங்கினர். நாகப்பட்டணத்தில் இருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் மின்வாரிய ஊழியர்கள் வந்திருந்தனர்
.சர்…சர்ர்ர் என்று மரக்கிளைகள் வெட்டப்படும் சப்தமும் படார் என்று பெருங்கிளைகள் துண்டாக முறிந்து விழும் ஓலமும் அன்று இருட்டும் வரை கேட்க முடிந்தது.மஞ்சள் வண்ணம் பூசிய ஜேபிசி எந்திரங்கள் மட் படக் என்ற ஒலிகளை எழுப்பிக்கொண்டு இங்குமங்கும் சரிந்துபோன மரங்களோடு போராடிக்கொண்டிருந்தது. அறுக்கப்பட்ட மரத்துண்டுகளையும் நெடிய மின்கம்பங்களையும் எங்கிருந்தோ வந்த க்ரேன்கள் இங்கும் அங்கும் சுமந்து திரிந்தன இரும்புக்குதிரைகளாக வர்ணிக்கப்பெறும் லாறிகள் மரத்துண்டுகளையும் பெருங்கிளைகளையும் அள்ளி அள்ளி எங்கோ கொண்டுபோய்  கொட்டின.இத்தனை பெரிய பட்டாளம் கைவசம் இருந்தபோதும் இந்த நகரியம் இயல்புக்கு வர ஒரு வாரத்துக்கு  மேலாயிற்று. ஏறதாழ ஏழு நாட்களுக்குப்பிறகே மின் இணைப்பும் தொலைபேசி இணைப்புகளும் தரப்பட்டன. இடையிடையே லாரிகளில் நிரப்பப்பட்ட குடிநீர் தெருவுக்கு தெரு வழங்கியதை மறக்க முடியாது.
இந்த வார்த் புயலைப்பொறுத்தவரை இங்கு உயிச்சேதம் என்று எதுவும் ஏற்பட்டு விடவில்லை.மக்கள் பெரும்பாலும் பாதுகாப்பாகவே இருந்திருக்கிறார்கள் வீதிகளில் திரியும் விலங்கினங்கள் எங்கெங்கோ தஞ்சமடைந்து தங்களை காத்துக் கொண்டிருக்கின்றன. மண்ணிற்கும் மனிதற்கும் இன்னும் எத்தனையோ உயிரினங்களுக்கும் அரனாக நின்றிருந்த வகைவகையான மரங்கள்தாம் தங்கள் பிடிமானத்தை இழந்து வீதியில் சரிந்திருக்கின்றன. மின் கம்பங்களும் மின்மாற்றிகளும் கடுமையாக தாக்கப்பட்டபோது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் கேள்விக்குறியாகிற்று. இந்த நகரிலிருந்த ஏராளமான பறவைகள் தங்கள இருப்பிடத்தை இழந்து தடுமாறிய காட்சி கொடூரமானது.
மரங்களின் வீழ்ச்சியைப்பற்றி பேசும்போது பல்வேறு கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. பாரம்பரிய மரங்களைத்தவிர்த்து மாற்று மரங்களை தெரிவு செய்ததுதான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று  சொல்லப்பட்டது.பாரம்பரிய மரங்களைப் போன்ற ஆழமான ஆணி வேர்களை இத்தகைய மரங்கள் பெற்றிருக்காவிட்டாலும் வேறு பல சிறப்புகள் இந்த மரங்களுக்கு இருப்பதாகவே நினைக்கிறேன். பாரம்பரிய மரங்களைக்காட்டிலும் எளிதாகவும் விரைவாகவும் வளரக்கூடியவை இந்த மரங்கள்.சாலையோரங்களிலும் குறுகிய வீதிகளிலும் எழிலான தோற்றத்துடன்  நிற்ககூடியவை. பெரும்பாலும் குறுகிய தெருக்களில் இவற்றுக்கு எந்தவொரு  ஆபத்தும் நேர்ந்து விடுவதில்லை.இந்த சூரைக்காற்றுக்கு பலியான பெரும்பாலான மரங்கள் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலானவை என்பதை பார்க்கவேண்டும்
இந்த பெருந்துயர் நிகழ்ந்தபோது அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் யாரும் பதவிகளில் இல்லை. இருந்தபோதும் இந்த துயர் துடைப்பு பணிகளில் அவர்களின் பங்கு மகத்தானது.
இந்த பகுதியை பொறுத்தவரை குறிப்பாக முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பதவியிலிருந்த திரு ஜெ சண்முகத்தின் செயல்பாடுகள் போற்றத்தக்கவை.வார்த் புயல் கரைகடந்த நேரத்திலிருந்து ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை அவர் ஆற்றிய களப்பணி அவர் சார்ந்திருந்த இயக்கம் கர்வம் கொள்ளத்தக்கது. அவருடைய அற்புதமான களப்பணியை  இரண்டாம் முறையாக கண்கூடாக பார்த்தேன். இதற்கு முன்னால் அவரால் இங்கே அமைக்கப்பெற்ற நேர்த்தியான காங்ரீட் சாலைகள் குறிப்பிடத்தக்கது. பிற மாவட்டங்களில் இருந்து வந்த அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து இந்த நகரியத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவந்த அவருடைய களப்பணி போற்றுதற்குறியது.
ஆளும் கட்சியைச்சேர்ந்தவர்களும் இந்த மீட்புப்பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தது மகிழ்வான செய்தி.அதே சமயம் வீதிவீதியாய் வந்து வெற்றி பெற்ற இந்த தொகுதியின் சட்டமன்ற பிரதிநிதியை இந்த இக்கட்டான தருணத்தில் காணமுடியாமற் போனது துரதிஷ்டம்.
மக்கள் பணியில் பதவி என்பது நாம் மேலணிகின்ற துண்டுக்கு சமமானது. அதே சமயம் நாம் ஏற்றிருக்கிற சமுதாயப்பணியோ இடுப்பில் இறுயிருக்கும் வேட்டிக்கு நிகரானது. என்று பேற்றிஞர் அண்ணா சொல்லுவார்.
பதவியற்ற போதும் சில கழகக்கண்மணிகள் இப்போது ஆற்றியிருக்கிற பணிக்கு  தலைதாழ்த்த விரும்புகிறேன்.
-    25 12 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !