வெள்ளி, மே 13, 2011

மாற்றம்...ஏமாற்றம் !

பாண்டியன்ஜி
கடந்த ஒரு மாத காலமாக மூன்றடுக்கு பாதுகாப்பளித்து கட்டிக்காத்த பரமரகசியத்தை தேர்தல் ஆணையம் இன்று காலை பத்து பதினோரு மணியளவில் நடுத்தெருவில் போட்டு உடைத்திருக்கிறது. மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று மாறி மாறி எழும்பிய குரல்களுக்கு ஏற்பதமிழக மக்கள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
திராவிட இயக்க குடும்பப் பூசலில் திமுக வை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட  எம்ஜி ஆரால் துவக்கப்பட்ட அண்ணா திமுக இன்று ஆறாவது முறையாக ஆட்சிபீடம் ஏறுகிறது. மிகுந்த தன்னம்பிக்கையும் அளவற்ற போர்குணமும் நிறைந்த பெண்மணி ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிறார்.
அவர்தம் வெற்றிக்கு வேர்கள் தன் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
மூன்றாவது முறையாக முதல்வராகும் ஜெயலலிதா கடந்த காலங்களில் தான் நடக்க நேர்ந்த வழித்தடத்தில் தடையாக நின்ற கற்களை படிக்கற்களாக மாற்றி வருங்காலத்தை எதிர் கொள்ளவார் என்று நம்புகிறேன்.
இந்த பெரும் பயணத்தில் அவருக்கு துணையாக நின்ற திரு விஜயகாந்துக்கும் இருவேறு கம்யூனிஸ்ட்களுக்கும் கூட வேர்கள் தன் வாழ்த்துக்களை பதிவு செய்கிறது. விஜயகாந்தின் தே.மு.தி. க  புளித்துப்போன திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என்ற நம்பிக்கையை விலை கொடுத்து  ஏறத்தாழ 25 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் தன் இயக்கத்தை மேலும் முறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.அனுபவம் மிக்க அறிஞர்களை 
இணைத்துக் கொள்வதன் மூலமும் பொறுப்புக்களை பகிர்ந்தளிப்பதன் மூலமும் மட்டுமே மக்களுடைய எதிர் பார்ப்பை ஈடு செய்ய இயலும்.
இந்த அயந்தாண்டுகளில் திமுகவின் மக்கள் பணி முன் எப்போதும் இல்லாத அளவிலேயே இருந்திருக்கிறது. இருந்தபோதும் நடுத்தர வர்கத்தினரின் நற்மதிப்பை பெறமுடியாமல் போனது உண்மை. நாடு முழுதும் எகிறிக்கிடந்த விலை உயர்வு , நாள் முழுதும் ஏற்பட்டிருந்த மின் பற்றாகுறை கூடவே
பயணித்த ஊழல் - அத்தனையும் சேர்ந்து திமுக வெளியேற்றியிருக்கிறது.
இந்திய ஜனநாயகத்தின் விளிம்பு நிலையாகக் கருதப்படுவது மக்கள் மன்றம்.மக்கள் மன்றத்தின் வேர்களைக்காப்பது இந்த நாட்டின் உச்ச நீதிமன்றமே. சரியோ தவரோ இந்த இரண்டிற்கும் தலைவணங்க வேண்டியது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனது கடமை!
இந்த மண்ணில் எத்தனை முறை சறுக்க நேர்ந்தாலும் எவரும் பாடம் கற்பதில்லை ! 

இடுகை 0056

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !