புதன், மே 18, 2011

பயணத்தில் தொலைத்த பண்பு !

பாண்டியன்ஜி
மதியம் மணி ஒன்றிருக்கும். நல்ல உச்சி வெயில்.
சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அந்த அரசுப்பேரூந்து மிகுந்த களைப்புடன் திருக்கடையூர் நிருத்தத்தில் குலுங்கி நின்றது.திருக்கடையூர் நீண்ட ஆயுளுக்கான பிரித்தியோக வழிபாடு நடத்தப்படுகிற பிரச்சித்தி பெற்ற தலம் .தமிழகத்திலேயே மிகமிக வசதியோடு வாழ்கின்ற அர்ச்சகர்கள் நிறைந்து காணப்படுகிற தலமும் அதுதான்.பெரு நகரங்களுக்கு இணையான தங்கும் விடுதிகளும் நிறைந்த இடம்.நாகப்பட்டினம் போவதற்கு சிதம்பரத்தில் அந்த பேரூந்தில் ஏறியிருந்தேன். பண்டிகை காலமும் கல்யாணதேதியும் இணைந்துவர வழியெங்கும் பயணிகள் கூட்டத்துக்கு குறைவில்லை.ஆண்களும்
பெண்களும் குழந்தை குட்டிகளுடன் சாலையோரத்தில் ஆங்காங்கே பேரூந்து வருகையை எதிர்நோக்கி நீண்ட நேரம் காத்திருப்பதைக் காணமுடிந்தது.அதில் வயதான முதியோர்களும் நிரம்பக் காணப்பட்டார்கள்.இத்தனைக்கும் ஏறத்தாழ மணிக்கொருமுறை குறுக்கும் நெடுக்குமாக அந்த சாலையில் பேரூந்துகள் ஓடிக்கொண்டுதானிருந்தது.
பேரூந்து நின்றவுடன் ஆங்காங்கே நின்றிருந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் பேரூந்தின் இரு வாயில்களையும் ஒரு சேர முற்றுகையிட்டனர். திடீரென்று ஏற்பட்டுவிட்ட அந்த கும்பலில் குழந்தைகளும் முதியோர்களும் சிக்கித்திணருவதைக் காணமுடிந்தது. முன்னதாகவே பேரூந்து முழுதுமே அளவுக்கதிகமான பயணிகள் காணப்பட்டார்கள் .இறங்கவேண்டிய ஒரு சிலரும் வழியேதும் தெரியாமல் திகைத்து நிற்பதைக்காணமுடிந்தது. இருந்தபோதிலும் இருதரப்பிலும் விட்டுக்கொடுக்க தயாராயில்லை.
இதற்கிடையில் இரண்டு மூன்று புத்திசாலி இளைஞர்கள் வாயிலின் எதிர்புர சன்னல் வழியாக கைகுட்டைகளை வீசி இருக்கின்ற இருக்கைகளை பட்டா செய்து கொண்டார்கள்.
இறங்க வழி விடுங்கய்யா...நீங்க எல்லாம் மனுஷங்கதானா...
சர்தான் வாய மூடுய்யா..நீ மட்டும் எப்பிடி ஏறுன..
அய்யோ..கால் .. கால்..சனியன் புடிச்சவனுவ..
விதம் விதமான கூக்குரல்கள். ஒரே இரச்சல்.
அத்தனையும் மீறி ஒரு நடுத்தரவயதுப் பெரியவர் இடையில் புகுந்து கசங்கியசலவைச்சட்டையுடன் கண்ணாடி கழன்று விழ ஏறி காலியிடத்தில் அமருகிறார். செக்கச் சிவந்த மேனி.நெற்றியிலே பக்திக்குறியகுறியீீடு. திருக்கடையூர் அபிராமியை தரிசித்து வந்திருக்கவேண்டும். அவரைத்தொடர்ந்து பெண்களும் பெரியவர்களும் ஏற முயலுவதைப் பார்த்தேன்.ஏறிய ஒரு சிலரும் இருந்த இருக்கைகளில் கைகுட்டைகளைப்பார்த்து தருமத்துக்கு கட்டுப்பட்டு நிற்கவே முடிந்தது .நடத்துனரோ தன்னுடைய பயணச்சீட்டு கணக்குகளில்
ஏற்பட்டுவிட்ட கோளாருகளை சரிசெய்வதிலேயே லயித்திருந்தார்.
கரெக்டா நாலு மணிக்கு ஸ்டாண்ட்ல நில்லுடா.. - ஓட்டுநர் கைபேசியில் யாருடனோ அக்கரையா பேசிக்கொண்டிருந்தார்.
ஏம்மா இப்புடி அவசரப்படுற..இறங்கின பிறவு நின்ணு நிதானமா ஏறு. - ஒரு கனமான குரல்.
அடிபட்டு விழுந்தா நம்ம பொழப்புல்ல நாறிடும் - இன்னொரு சன்னமானகுரல்.
திரும்பிப் பாற்கிறேன்.
முண்டியடித்து முன்னால் ஏறினாரே அந்தப் பெரியவரும் இருக்கைகளை சன்னல் வழியே ரிசர்வ் செய்த அந்த உயரமான இளைஞனும்தான்.
ஒருவழியாக அனைத்து பயணிகளையும் திணித்துக்கொண்டு பேரூந்து பெருமூச்சுடன் நகர்ந்தது.கூச்சலும் குழப்பமும் சிறிது நேரம் பெருகி பின்அமைதியாயிற்று. 
இந்த நடுத்தர வர்கத்தின் மனசாட்சி..எங்கே போயிற்று. வயிறு நிறைந்தவுடன் இந்த வர்கம் வெளிப்படுத்துகிற வார்த்தைகள்..அப்பப்பா...
.இப்போதெல்லாம் அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் அளவே
இல்லை .  பேரூந்து நின்ற பின் இறங்க வேண்டுமென்பதோ பயணிகள் இறங்கியின் ஏறவேண்டுமென்ற சிந்தனையோ எவருக்கும் இருப்பதில்லை.விதிகளை ஆங்காங்கே எழுதி நினைவூட்டியிருந்தாலும் எவரும் எண்ணிப்பாற்பதில்லை. முழுதுமாக தன்னலத்தையே கருத்தில் கொண்ட ஒரு சமூகம் எப்போதோ உருவாகிவிட்டது.வயது முதிர்ந்தவர் என்பதோ குழந்தைகளுடன் கூடிய பெண்கள் என்பதையோ இன்றைய சூழலில் ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லை.ஒரு கிலோமீட்டருக்குள் பயணிக்க நேர்ந்தாலும் இன்றைய இளையதலைமுறை சொகுசாக உட்கார்ந்தே பயணிக்க விரும்புவதை கண்டிருக்கிறேன். இது போன்ற தன்னலச் செய்கைகளை தவறு என்று எவரும் போதிபிப்பதில்லை.
படிக்காத கல்வியறிவற்ற ஒருதலைமுறையிடம் காணப்பட்ட மறியாதையும் பண்பும் இப்போது மறக்கப்பட்டுவிட்டது.இன்றைய சூழலில் படித்தவர்கள இளைஞர்கள் பெண்கள் முதியவர்கள் என்றபாகுபாடு எதனையும் காணமுடிவதில்லை.
இவற்றையெல்லாம் பேரூந்துகளைப் பொருத்தவறை அவ்வப்போது நினைவூட்ட வேண்டிய நடத்துநர்களும் ஓட்டுநர்களும் தமக்கு சம்மந்தமற்றதாகவே இருக்கின்றனர்.
அயல் தேசங்கள் போற்றி புகழுகிற தமிழ் கலாசாரம் பண்பு எங்கோ காணாமற் போனதை உணர்கிறேன்.

இடுகை 0057

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !