திங்கள், செப்டம்பர் 20, 2010

தினமணிக்கு தீராத கரை!

 ( எழுத்தாளர் வாசந்தி , பழ. நெடுமாறன் எழுத்துக்களுக்கு எதிரொலி ! )
                                      வில்லவன் கோதை
    
 நாளேடுகளிலும் பல்வேறு ஊடகங்களிலும் நாள்தோரும் எழுப்பப்படுகிற பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை தமிழகமுதல்வர் கலைஞர் கருணாநிதி கூர்ந்து நோக்கி உடனுக்குடன் தக்க முடிவுகள் எடுத்துவருவதை சமீபகாலங்களில் அதிகமாகவே அறிந்திருக்கிறேன். இந்து , தினமணி , தினமலர் போன்ற நாளேடுகள் தாங்கள் எழுப்பிய பெரும்பாலான பொதுநலகோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றபட்டதை பெருமையோடு விளித்துக்கொண்ட நிகழ்வுகளையும் கண்டிருக்கிறேன். இந்த தள்ளாத வயதிலும் பல்வேறு பணிகளுக்கிடையில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒப்பு நோக்கி தக்கபதிலும் மறுப்பும் அளிப்பது அத்தனை எளிதன்று. எப்போதுமே புத்தகங்களுக்கு அணிந்துரை அளிப்பதாக இருந்தாலும் சரி , புதிய நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்ற நேர்ந்தாலும் சரி , முதல்வர் கருணாநிதி முன்னதாக எடுத்துக்கொள்ளும் சிரத்தை சாதாரணமானதன்று. மற்ற முதல்வர்களைப்போல தனிச்
செயலர்கள் தருகின்ற உரைகளை உரக்க படிக்கவேண்டிய தருணங்கள் அவருக்கு என்றுமே நேர்ந்ததில்லை.
பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் அனைத்து திசை திறனாய்வுகளையும் எதிர்கொள்ளவேண்டியவன்தான். இருப்பினும் தெருவோரங்களில் எழுப்பப்பெரும் கூச்சல்களுக்கெல்லாம் விளக்கம் அளித்திடல் இயலாததொன்று. அதே சமயம் மக்கள் கூட்டங்களிலும் மிகுதியாக
விற்கப்படும் பத்திரிக்கைகளிலும் பெரும்பாலோர் விரும்பிக்காணும் ஊடகங்களிலும் வைக்கப்படுகிற அய்யங்களுக்கு அவசியம் பதிலளித்தே ஆகவேண்டும். இயலாத நிலையில் மக்களிடமிருந்து முடிவான தீர்ப்பைப் பெறவேண்டியிருக்கும்.
சில நாட்களுக்கு முன் எழுத்தாளர் வாசந்தியின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வாசிக்க நேர்ந்தது. தமிழில் பல்வேறு நாவல்களையும் கட்டுரைத்தொகுப்புகளையும் எழுதி தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஓர் இடத்தை நிர்ணயம் செய்துகொண்டவர் வாசந்தி. தாய் வழியில் இயல்பாக கிடைக்கப்பெற்ற தமிழ்ப்பற்றும் இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களில் வாழ்ந்த சூழலும் அவருடைய எழுத்துக்களுக்கு புதுமை சேர்க்க உதவியது. அவருடைய கட்டுரைத்தொகுப்பில் தன்னுடைய தமிழக வாழ்க்கைச்சூழல் பற்றியும் , தான் இந்தியா டுடே தமிழ் பதிப்பில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது கிடைக்கப்பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒருமுறை தமிழக அரசியல் சூழல் குறித்து விமர்சனக்கட்டுரை எழுதிய சக ஆசிரியர் ஒருவர் தமிழகமுதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி குறித்து எழுதநேரும்போது வரம்புமீறிய சொற்களை பயன்படுத்தியிருந்ததாகவும்

அதனைத் தன்னால் தவிற்க இயலாமற் போய்விட்டதென்றும் குறிப்பிட்டிருந்தார். அப்போதெல்லாம் கனிமொழி அரசியல் அரங்கில் நுழையாதிருந்தநேரம்.
அதன் விளைவாக அரசிய் விமர்சகர் சின்னகுத்தூசியிடம் ஆசிரியர் என்றமுறையில் வாங்கிகட்டிக்கொள்ள நேர்ந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். கருணாநிதியின் தூண்டுதலாலேயே இது நிகழ்ந்தது என்றும் கருணாநிதி அரசியல் விமர்சனங்களைத்தாங்கும் திறனற்றவர் என்றும் தன்னுடைய எத்தனையோ தாறுமாறான எழுத்துக்களுக்கு பதிலேதும் அளிக்காத கோபால்சாமியே தமிழகத்தின் தாங்கும் சக்தி என்றும்  புகழுரைத்திருந்தார்.                                                                                                                    இது போன்ற கருத்துக்களையே இன்று தமிழகத்தின் பெரும்பாலான விமர்சகர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. சமீபத்திய எதிர்கட்சித்தலைவியின் வரம்புமீறிய பேச்சுக்களுக்கும் தினமணி நாளிதழில் வொளியான கேலிச்சித்திரத்துக்கும் பதிலளித்த முதல்வருக்கு மேற்குறிப்பிட 
முத்திரைதான் குத்தப்பட்டிருப்பதை உணரவேண்டும். பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் எழுப்பப்படுகிற குற்றசாட்டுகளுக்கு தகுந்த தன் ஞாயங்களை எடுத்துரைப்பது அத்தனை பெரிய குற்றமா.போற்றுவோர் போற்றட்டும் , புழுதி வாரித்தூற்றுவோர் தூற்றட்டும் என்று அத்தனையும் அலட்சியப்படுத்துவதுதான் விமர்சனங்களைத் தாங்கும் சக்தியா.
ஒரு மாநில முதல்வர் மகளை அதுவும் பொதுவாழ்வில் நுழையாதிருந்தவேளையில் வரம்புகடந்து எழுத பத்திரிக்கை சுதந்திரம் இடமளிக்கிறது. தவறு என்றுணர்ந்தபோதும் மறுப்பு எழுத மனதில் இடமில்லை. பாதிக்கப்பட்டவரோ அவர்பால் நேசம் கொண்டவரோ திருப்பியளிக்கும் பதிலடி மட்டும் வலிக்கிறது. தமிழக அரசியல் குறித்து ஆங்கில புத்தகம் எழுத தமிழக ஏடுகளை புரட்டிய வாசந்தி கலைஞரின் 60 ஆண்டுகால அரசியல் ஏடுகளைஅக்கரையோடு புரட்டியிருந்தால் கலைஞரின் விமர்சனங்களைத்தாங்கும் சக்தி எத்தகையது என்பதை அறிந்திருக்கக்கூடும்.
இதேபோல் சமீபத்தில் தினமணி நாளிதழில் வெளியான கேலிச்சித்திரம் ஒன்றும் பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. சித்திரக்காரர் மதியின் கேலிச்சித்திரங்கள் ரசிக்கத்தக்கவையே.அதிலொன்றும் அய்யமில்லை. முதல்வரது வாரிசுகளின் திரையுலகபிரவேசம் கேலிச்சித்திரத்தின் கருத்துக்களனாக அமைந்திருந்தது. இதுபற்றிய முதல்வரின் பதிலுரையை வரிக்கு வரி விமர்சித்து பழ.நெடுமாறன் எழுதிய கட்டுரை அடுத்து வெளியானது.
ஒரு கேலிச்சித்திரத்துக்கு முதல்வர் இத்தனை முக்கியத்துவம் தர வேண்டுமாஎன்ற ரீதியில் துவக்கி சங்கர்ஸ் வீக்லியில் வெளியான கேலிச்சிதிரத்தையும் ஒப்பு நோக்கியிருந்தார்.
பண்டித நேருவும் சர்தார் படேலும் சில விஷயங்களில் கொண்டிருந்த கருத்து வேற்றுமையைக் மனதிற்கொண்டு அந் நாளில் மிகுதியாக விற்பனையான சங்கர்ஸ் வீக்லியில் ஒரு கருத்துப்படம் வரையப்பட்டிருந்தது. இருவரும் பின்னணியில் ஆளுக்கொரு கத்தியுடன் ஒருவரையொருவர் கட்டித் தழுவுவதைப்போல வரையப்பட்டிருந்ததைப்பார்த்து இருவரும் பூரிப்படையவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். 
பல்வேறு பக்கங்களில் விளக்க இயலாத கருத்துக்களை முகத்திலறைந்தது போல் ஒரு நொடியில் எடுத்துரைக்கும் சக்தி சின்னஞ்சிறு கேலிச்சித்திரங்களுக்கு உண்டு என்பதை உணர வேண்டும்.விகடன அதிபரையும் முரசொலி செல்வத்தையும் சட்டமன்ற கூண்டில் ஏற்றிய பெருமை இந்த கேலிச்சித்திரங்களுக்கேயுண்டு. இருந்த போதிலும் இந்த சிதிரங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அனைத்தும் ஞாயமானவை என்று கருதமுடியாது.அவைகள் அனைத்தும் ஆதாரபூர்வமான அல்லது ஆதாரமற்ற யூகங்களின் அடிப்படையில்தான் அமையக்கூடும்.அனேகமாக அந்தந்த இதழைச்சார்ந்தோரின் மனநிலையையே பிரதிபலித்து வந்திருக்கின்றன. பண்டிதரும் பட்டேலும் பூரிப்படைந்தது வெளிப்படையில் உண்மையாக இருக்கலாம்.
அவர்களது உள் மன நிகழ்வுகள் எப்படியிருந்திருக்கும் என்பதுபோன்ற விஷயங்களையெல்லாம் அறியாததனால்தான் பழ. நெடுமாறன் இன்றும் தனிமரமாக நிற்கிறார். இப்போதைக்கு ஈழ பிரச்சனையும் இல்லாத பட்சத்தில் அவர் நெடுமரம்தான் என்பதை உணரவேண்டும். தனிமனித தூற்றலுக்குமுக்கியத்துவம் தந்து வரம்பு மீறி வசைபாடும் பழ.நெடுமாறன் மற்றும் பழ. கருப்பையா போன்றோர் கட்டுரைகளுக்கு தன்
பொன்னான இடத்தை நல்கி தினமணி தீராத கரையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
------------------------------------------------------------ 
வாசந்தியின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசிக்கின்ற சூழல் அமையப்பெறாவிடினும் அவருடைய எழுத்துக்களை நேசிப்பவன்.அதைவிட கலைஞரின் பேச்சையும்,எழுத்தையும் ஓய்வறியா உழைப்பையும் வியந்து பார்த்தவன் என்ற முறையில் இந்த இடுகையை எழுத நேர்ந்தது. ஒருவேளை இதனையும் அவர்தான் தூண்டினார் என்ற குற்றச்சாட்டு எழும்பக்கூடும் 

------------------------------------------------------------
இடுகை 0029

4 கருத்துகள்:

  1. //தனிமனித தூற்றலுக்கு முக்கியத்துவம் தந்து வரம்பு மீறி வசைபாடும் பழ.நெடுமாறன் மற்றும் கூலிக்கு குரல் கொடுக்கும் பழ. கருப்பையா போன்றோர்//
    பதில் சொல்ல துப்பில்லையா. கேள்வி கேட்டவனை கேவலப்படுத்து என்ற கருணாநிதியின் 'உயர்ந்த கொள்கை' தான் உங்கள் பதிவிலும் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  2. Potruvor Potrattum! *uzhuthi vaari Thootruvor thootrattum!
    Mada saambiraanigal! Avar pena keyezhuthaal indru vaazhvu petror avarai vasai paaduvathai fashion-aaga maatrikondullathu!

    பதிலளிநீக்கு
  3. ஐயா, அவர் விமர்சனத்தைத் தாங்குவதில் எவ்வளவு வல்லவர் என்பதைத் தமிழருவி மணியன் என்று ஒருவர் இருக்கிறாரே, அவரிடம் கேட்டுப் பாருங்கள், நிறையச் சொல்வார். ஒருவேளை நீங்கள் தமிழருவி மணியன் தரமற்றவர் என்று எண்ணுபவராக இருந்தால் இந்தக் கருத்துரையை மதிக்க வேண்டாம். விட்டு விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. பாரதிராஜாவுக்கு
    கலைஞரின் வரலாறு நெடியது.பெரியார் அண்ணா விருப்பங்களுக்கு பெருமளவுக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்தவர் கலைஞர்.குறைகளே அற்றவர் கலைஞர் என்று நான் எந்த இடத்திலும் கூப்பாடு போட்டதில்லை. திமுகாவினர் அத்தனைபேரும் யோக்கியர்கள் என்றும் நான் வாதாடியதில்லை. திமுகாவை அகற்றவேண்டும் என்று குரல் கொடுக்கும் எவரும் ஒருவர்கூட இவருக்கு வாக்களியுங்கள் என்று பேசக்கூட துணிவற்றவர்களாகவே இருக்கிறார்கள். தமிழருவி மணியனின் தரத்தைப்பற்றியோ நெடுமாறன் குணத்தைப்பற்றியோ நான் குறைவாக மதிப்பீடு செய்த்தேயில்லை..அவர்கள் எடுத்த நிலைப்பாட்டால் காங்கிரசில் இருந்து அகற்றப்பட்டு இன்று தனித்து தன நிற்கவேண்டியிருக்கிறதே என்பதுதான்.ஊழலை எதிர்ப்பதாக பேசி மீண்டுமொரு பாதளம்தானே அவர்களால் சிபாரிசு செய்யப்பட்டது.அவர்களுடைய ஒருபக்கப்பார்வை அடுத்தவனுக்குத்தானே பலத்தை கொடுத்த்து.
    கலைஞருடைய அறுபதாண்டு பணியில் இந்த மண்ணுக்கும் மொழிக்கும் எதுவுமே செய்யவில்லை என்று கருதுகிறீர்களா பாராட்ட ஏதுமில்லாதவரா கலைஞர்.உங்கள் கருத்துக்களை அருள்கூர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !