வெள்ளி, மார்ச் 25, 2011

திமுக காங்கிரஸும் அண்ணா திமுக காங்கிரஸும்!

அரசியல் அரங்கம் ( இரண்டு )
காங்கிரஸ் இன்று...
                               பாண்டியன்ஜி

நீண்ட பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் பேரியிக்கத்தை எண்ணிபார்க்கிறேன்.

அன்னாளைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் நான் சந்திக்க நேர்ந்தது பெருநிலக்கிழார்கள் நிறைந்து காணப்பட்ட காங்கிரஸ் கட்சியும் தாழ்த்தப்பட்ட தலித்துக்கள் அங்கம் வகித்த கம்னியூஸ்ட் இயக்கமுமே.அடுத்த சில ஆண்டுகளில்தான் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க நேர்ந்தது.தமிழகமெங்கும் சிதறிகிடந்த பல்வேறு கட்சிகளின்வாக்குகளை சிந்தால் சிதறாமல் சேர்த்தெடுத்து 1967 ல் காங்கிரஸிடமிருந்து ஆட்சியை கைபற்றினார் அண்ணா. அன்று பறிகொடுத்த ஆட்சியை மீட்பதற்கான எவ்வித சிந்தனையுமின்றி பின்னாளில் பிளந்து போன திராவிட இயக்கங்களின் முதுகினில் மாறி மாறி பயணிப்பதையே சுகமாக எண்ணி வந்திருக்கிறது தமிழக காங்கிரஸ் இயக்கம். தில்லி தலைமை மதிக்கத் தக்க காமராசரைப் போன்றவொரு தலைமை தமிழக காங்கிரஸ் இயக்கத்துக்கு கிட்டாதது துரதிஷ்டமானதுதான். தங்கள் இருக்கைகளை திடமாக காத்துக்கொள்வதைத்தவிற எந்தவொரு மாநில காங்கிரஸின் வளற்சியைப்பற்றியும் தில்லி கவலைப்பட்டதேயில்லை.
தமிழக காங்கிரஸில் அங்கம் வகித்தவர்களோ இயக்கத்தை மீறிய மேதாவிகளாகவே இருந்தனர். இவர்களிலே அதி மேதாவிகளாக இருந்த நெடுமாறன் திண்டிவனம் ராமமூர்த்தி நெல்லை கண்ணன் தமிழருவி மணியன் போன்றோர் இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியே தனித்தனியாக சஞ்சரிப்பதைக்காணலாம். இதே போன்று முன்னொரு காலத்தில் அளவுக்கதிகமான அதி மேதாவிகளைக்கொண்டு மத்தியில் காங்கிரஸுக்கெதிராக வடிவமைக்கப்பெற்ற ஜனதாகட்சி குறைந்த காலத்திலேயே சிதறிப்போக நேர்ந்ததை மறந்துட இயலாது.  தமிழக காங்கிரஸார் ஒன்று கூடி ஒரு சுதந்திர தினத்தைக்கூட கொண்.டாடியதாக வரலாறு கிடையாது. இந்த இரு பிரிவினரும் என்று இணைந்து ஒரு திசையில் பயணிக்கிறார்களோ அன்று மட்டுமே தமிழ்நாட்டு காங்கிரஸுக்கு விமோசனம் ஏற்படக்கூடும்!
இந்த கட்டுரை எழுதும்போது கூட சத்தியமூர்த்தி பவனில் வீசப்படுகிற இருக்கைகளையும் சிதறி தெரிக்கின்ற கண்ணாடித்துண்டுகளையும் எரிக்கப்படும் தமிழக காங்கிரஸ் தலைவர் உருவபொம்மையையும் நேரலையாக உலகமே பார்த்துக் கொண்டிப்பது எனக்கு வியப்பாக தெரியவில்லை. ஒருவேளை பெரும்பான்மை பெற்று கோட்டைக்குள் நுழைய நேரிட்டால் நிலமை இன்னும் மோசமாகக்கூடும் என்றே தோன்றுகிறது. எதிர் வரிசை வியந்து பார்க்கலாம்.நெருக்கடி தந்து பெறப்பட்ட தொகுதிகளில் கரை சேருவார்களா ?
தமிழக காங்கிரஸ் தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை தங்கள் தனித்தன்மையை மறந்து இன்றுவரை தமிழக திராவிட இயக்கங்களின் துணை குழுக்களாகவே தங்களை எண்ணிக்கொண்டு வந்திருக்கின்றனர். ஒவ்வொருமுறை தேர்தல்வரும் போதும் வெளிப்படுகிற செயல்பாடுகளே இதற்கு சான்று.யானைக்குஅதன் பலம் தெரிவதில்லை அதனால்தான் மாவுத்தனுக்கு கட்டுப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் தலைமையும் தங்கள் வலுவை உணர்ந்ததாக தெரியவில்லை.
--------------------------------------------------------------
இடுகை 0045

1 கருத்து:

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !