ஞாயிறு, மே 01, 2011

இலக்கியம் பேசு ! அரசியல் அகற்று !

 இனிய இலக்கிய சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் தாங்கட்கு 
50 களில் திராவிட இயக்கங்கள் கையிலெடுத்த ஆயுதங்களான பகுத்தறிவு சிந்தனைகளும் தாய் மொழி பற்றும் என்னை பெரிதும் ஈர்த்தன. இன்னும் சொல்லப் போனால் சிந்தனைத் திறனையும் மொழியின் சுவையையும் முதல் முதலில் ஊட்டியவர்கள் அவர்கள்தாம்.இன்று அவர்கள் வேண்டுமானால் கலைஞரின் சந்ததியைப்போல் திசை தவறி பயணித்திருக்கலாம்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் வரிகளுக்கேற்ப பின்நாளில் எந்த பாகுபாடுமின்றி பேச்சும் எழுத்தும் எங்கெல்லாம் மதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் என் பார்வை படர்ந்தது.
அப்போது நீங்கள் காங்கிரஸ் பேரியியக்கத்தில் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் நிகழ்த்திய ஒரு சிலசொற்பொழிவுகளையும் பட்டிமன்ற விவாதங்களையும் வியப்போடு கேட்டவன் நான்.நீங்கள் விவரித்த புராணச்சுவைகள்கூட என் தமிழ் கருதி என் பகுத்தறிவுச் சிந்தனைகள் குறுக்கே வந்ததில்லை.இலக்கியங்களையும் புராணங்களையும் பேசுவதைப்போல தான் சார்ந்து நிற்கும் கட்சிகளுக்கும் அதன் தம் தலைவர்களின் நேர்மைக்கும் வாதிடுவது எத்தகைய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை அறிந்தவன் நான். அதன் பொருட்டே வாழும் தலைவர்களின் சித்திரங்கள் நம் வரவேற்பரைக்கு என்றும் ஏற்றதல்ல என்று இன்றும் நம்புகிறவன் . அவர்கள் அத்தனைபேரும் ஒருநாள் தங்கள் ஆடைகளை மாற்றி நம் முகங்களில் முழுமையாக கரிபூசக்கூடும்
என்பதை உணர்ந்திருக்கிறேன்.அதைப்போல கட்சிகளில் இருக்கும் போது கட்சிகளின் முடிவகளுக்கு செவி சாய்த்தே ஆக வேண்டும்.அது இயலமற் போனது துரதிஷிடம்தான்.
இயல்பாகவே மிகுந்த தன்னம்பிக்கையும் தமிழ்ச்செறுக்கும் நிறைந்த குணம் உங்களை இன்று தனித்திருக்க தங்களுக்கு உதவியிருக்கிறது என்று கருதுகிறேன்.
உங்களுக்கு காங்கிரஸ் இயக்கத்தின்பால் இருக்கின்ற மாறா பற்றை என்னால் உணரமுடிகிறது.அதே
சமயம் அந்த பல்லக்கு தூக்கிகளின் கூத்தை உங்களால் சீரணிக்க முடியவில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்..கடந்த சில நாட்களாக நீங்கள தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிற கருத்துக்கள் ஒவ்வொன்றையும் படித்தே வருகிறேன்.இவையனைத்தும் நீங்கள் எந்த தளத்தில் நிற்கிறீர்கள் என்பதை அறிவிக்காவிடினும் எந்த தளத்திலிருந்து பேசுகிறீர்கள் என்பதை என்னால் உணரமுடிகிறது.
கலைஞர் மீதும் திமுக மீதும் தங்களுக்கேற்பட்டிருக்கிற அறச்சீற்றமோ அல்லது சாதாரண சீற்றமோ
வரிக்கு வரி வெடித்துச் சிதறுகிறது.அதே சமயம் நீதி தேவதை ஜெயலலிதாவுக்காக உங்கள் மேலான யோசனைகளையும் அவ்வப்போது வாரி வழங்கி புராண காலத்து கண்ணனையும் சரித்திர சாணக்கியனையும் விஞ்சியிருக்கிறீர்கள்.வைகோவுக்காக கவிபாடிய கரிசனம் வியப்பளித்தாலும்
அதுவும் ஜெயாவுக்காக என்றறிந்தபோது தங்கள் சாணக்கியம் துர்வாசர் சோ வையே மிஞ்சியதை உணர்கிறேன்.
அப்படி நீங்கள் எழுப்பும் கூற்றுதான் என்ன.
திமுக ஊழலின் ஊற்றுக் கண்ணாகி விட்டது.திமுக வில் வாரிசுகளின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.கலைஞரின் வாரிசுகள்இந்த மண்ணையே சுரண்டுகிறார்கள்.இலவசங்களை வாரியிறைத்து பாமரமக்களின் வாழ்க்கையே நாசமாக்குகிறார்கள்.
பெரும்பாலும்
நடுத்தர வர்கத்தினரும் பத்திரிக்கைகளும் எழுப்புகிற இவைகளைத்தான் நீங்களும் எதிரொலிக்கிறீர்கள். இவையனைத்திலும் உண்மையே இல்லையென்று வாதிட நான் வரவில்லை.
நீங்கள் அதிமுக வுக்காக வாக்கு கேட்கவில்லை என்றாலும் அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை மறுக்கமுடியாது.
திமுக வெளியேற்றப்பட்டால் ஆட்சியில் அமரப்போவது கம்யூனிஸ்ட் பாண்டியனா.அல்லது அமையப்போவது உங்கள்
கனவு காமராஜர் ஆட்சியா.
அந்த அணியை திரும்பி நோக்குங்கள். கம்யூனிஸ்ட் உட்பட அந்த அணியில் ஊழலற்ற இயக்கம் ஏதேனும் உண்டா.எந்த அணியில் குடும்ப அரசியல் நுழைவு தவிற்கபட்டிருக்கிறது.இலவசங்களை ஏற்காத அரசியல் இயக்கங்கள் இருக்கிறதா.பாட்டாளி வர்கத்தின் அடையாளம் என்று சொல்லப்படுகிற கம்யூனிஸ்ட்கள் உட்பட ஊழலற்ற அமைப்புக்கள் எதனையும் காணமுடியுமா? வாரிசுளே அற்ற கட்சிகள் எதுவும் இந்த மண்ணில் உண்டா ?வாரிசுக்கு எதிரான மூதறிஞர் இராஜாஜியையும் பேரறிஞர் அண்ணாவையும் இன்னும் எத்தனை காலங்களுக்கு நாம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம்?ஓட்டுக்கு இலவசங்களை அறிவிக்காத கட்சி எதுவும் கண்களுக்கு புலப்படுகிறதா.
இந்த பாமரமக்கள்தானே ஏறதாழ பத்தாண்டுகள் ஜெயிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.அநத காலங்களில் அவர் இந்த மண்ணுக்கும் மொழிக்கும் ஆற்றிய சாதனை அடையாளங்கள் எதனையும் காட்ட முடியுமா. அவர் இந்த மக்களின் ஒவ்வொரு பிரிவிற்கும் இழைத்த அவலங்கள் தாமே மிஞ்சின.இறுதியில் 63 கோடிக்கு கணக்கு சமர்ப்பித்ததுதானே நிகழ்ந்தது.
திருக்குவளையில் இருந்து துண்டோடு வந்த கலைஞரைப் பார்த்தவர்கள் தேர்தலுக்கு காப்புத்தொகை செலுத்த கைவளையலை அடகுவைத்ததாக ஜெ எழுதியதை படிக்காமல் போனது வியப்பானது இல்லையா.
இன்றைய கலாச்சார சூழலில் ஊழல்கூட எதார்த்தம் என்று கொள்ளலாம்.அதே சமயம் மக்களின் வாக்குகளைப்எ பெற்று ஆணவத்தையும் அகங்காரத்தையும் முன்னுறுத்தி பொய்யும் புரட்டும் கலந்த அரசை எப்படி அனுமதிப்பது. பிரதமர் மன் மோகன் சிங் , வாஜ்பாயி ,ஜஸ்வந் சிங் , ஆளுநர் சென்னா ரெட்டி முதல் இனறைய கடைசி தா பாண்டியன் வரை அவரை சந்திக்க நேர்ந்த அனுபவங்கள் எத்தனை.
கூலித்தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கூட இன்று ஊழலில் பேசப்படவில்லையா?
திமுகவில் ஊழலே இல்லை என்று பேச எந்த காரணமும் என்னிடத்தில் இல்லை.அதே சமயம் வேறு ஒரு ஊழலற்ற ஒரு இயக்கம் இருப்பதாகவும் எனக்குத்தோன்றவில்லை.
திமுகவில் வாரிசுகள் கட்சியில் முக்கியத்துவம் பெற்றிருப்பது உண்மை.அதே நேரத்தில் வாரிசுகளற்ற ஒரு கட்சியும் இந்த மண்ணில் இருப்தாக எனக்கு தெரியவில்லை.ராஜீவ் காந்தியை காங்கிரஸ் மாலை போட்டு தேர்ந்தெடுத்தது போல் அந்தந்த கட்சியின் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கவலை.இடையில் ஓநாய்களுக்கு வேலை இருப்பதாக தோன்றவில்லை.
அதனையும் தாண்டி திமுக ஒரு இயக்கமாக இயங்குகிறது. கூட்ங்களாக அல்ல.
திமுக மக்களையும் மற்றவர்களையும் மதிக்கிறது. இன்றைய சூழலில் மின் வெட்டு ஒன்றைத்தவிற
மக்கள் தேவைகளுக்கு குறையொன்றும் இருப்பதாக தெரியவில்லை.ஊடகங்கள் எதிரொலிப்பதைப்போல் ஊழல்கள் இருக்கலாம். அதை சி. பி .அய்யும் நீதிமன்றங்களும் கவனித்துக்கொள்ளும் . புலனாய்வு இதழ்களும் சுப்ரமணி சாமியும் ஒத்துழைக் கக்கூடும்.
எந்த எழுத்தும் பேச்சும் நிமிர்ந்து நிற்க உண்மையான சிந்தனைகள் அடிப்படையாக அமைய வேண்டும். நாவலராய் திழ்ந்த நெடுஞ்செழியன் காணாமற் போனது அதனால்தான்.
அதுபோல.உங்கள் கவிதைக் கூட்டுக்குள் இந்த அரசியல் அசிங்கங்கள் தேவைதானா.
உங்கள் பேச்சும் எழுத்தும் அசாத்தியமானது.உங்களால் குறுகியகட்சிக் கட்டுப் பாட்டுக்குள்
நீடிக்க முடியாது என்றே கருதுகிறேன்.எத்தனையோ எழுத்துச் சிற்பிகளும் பேச்சு வல்லுநர்களும்
அரசியல் அகற்றி தமிழாய் வாழ்வதைக்காண்கிறேன். அன்னைத் தமிழுக்கு அணி சேற்க உங்கள் 
எஞ்சிய வாழ்க்கை உதவட்டும். இலக்கியம் பேசுக. அரசியல் தவிற்க.
சென்னையிலிருந்து பாண்டியன்ஜி.
இடுகை 0052




4 கருத்துகள்:

  1. நெல்லைக் கண்ணன்ஐயா அவர்கள் உண்மையான நிதர்சனத்தை அரசியலில் தேட முற்படும் ஒரு நடு நிலையாளராய் தன்பயணத்தை துவங்கும் போது ஏனய்யா?இடையினில் புகுந்து குட்டையக் குழப்புறீங்க?
    நல்லதசொல்லும் நல்ல மனிதர்களின் பயணத்தை வாழ்த்தாமல் இருந்தாலும் பரவாயில்லை மொட்டையடியாய் இப்படி பத்தாம் பசலித் தனமாய் விமர்சனம் என்ற பெயரினில் உண்மைதனை மறைக்காதீங்க நல்லத மறைச்சீங்கனா அடாது நடந்துடும் ஐயா!

    எத்தனையோ ஞானிகளும் , நல்லவரும் சொல்லித் திருந்தாத மனிதர்கள் இந்த நெல்லைக் கண்ணன் ஐயா சொல்லியாவது திருந்தட்டுமே அதையும் ஏனய்யா விமர்சனம் என்ற சாட்டை கொண்டு வெத்துக் கருத்தை உதிர்க்கிறீங்க! போங்கய்யா! எதையாவது நல்லது நடக்க நல்ல விஷயங்களை சொல்ல வலைத்தளத்தைப் பயன்படுத்துங்கய்யா! உங்களின் பொழுது போக்கிற்க்கு மட்டும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தாதிங்க ஐயா !பயன்படுத்தாதிங்க ஐயா !

    அன்புடன்
    நல்லதை விரும்பும்
    நல்லவர்களின் வழி
    நடக்க விரும்பும்
    நலவிரும்பி
    அன்புடன்
    தமிழ்பாலா-----

    பதிலளிநீக்கு
  2. அன்பார்ந்த கவிஞர் தமிழ் பாலாவுக்கு ,
    உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
    நாவுக்கரசர் கண்ணன் மீது ( நானும்தான்!) உங்களுக்கிருக்கும் ஈர்ப்பு உங்கள் பதிவில் உணர முடிகிறது.
    இருப்பினும் எனக்கேற்பட்ட அய்யங்களுக்கு பதிலின்றி வெருமனே சபித்திருக்கிறீர்கள்.
    பொழுது போக்குதற்கென்று என் வாழ்நாளில் எந்த செயலிலும் நான் ஈடுபட்டதில்லை.போன பொழுது திரும்ப கிடைக்காது என்பதை முழுமையாக உணர்ந்தவன் நான்.நலம் பயப்பது என்பது நம் சிந்தனைகளில் வெவ்வேராக இருக்கிறது. அவ்ளவுதான்.
    பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு
  3. இலக்கியம் பேசுக! அரசியல் தவிர்க்க என்று சொல்லும் பாண்டியன்ஜி அவர்களே ! நீங்களே அரசியல் கருத்துக்களை முன்வைத்துத்தான் இந்த கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள் மிகப்பெரிய ஊழல் பூதத்தை கவளச் சோற்றில் அமுக்கிவிட்டு உங்கள் கருத்துக்கு வலுச்சேர்க்க முற்பட்டு இருக்கின்றீர்கள் எல்லா அரசியல் இயக்கத்தின் நடைமுறையையும் பார்த்துவிட்டு தற்சமயம் எதுதற்காலிக தேவை என்று ஐயா நெல்லைக் கண்ணன் அவர்கள் ஆய்ந்து மக்களுக்கு சொன்ன கருத்துக்கள் வென்று இருக்கிறது ஐயாஅவர்களின் இலக்கை தற்சமயம் ஆளும் அரசு சரிவர செய்யவில்லை என்றால் அதற்கான மாற்றுக் கருத்துக்கான வழியில் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையும் அணிவகுக்க நெல்லைக் கண்ண்ன் ஐயா அவர்கள் நல்லகருத்துக்களை நிச்சயம் சொல்வார்கள் மக்களுக்காக ,செயல்படும் இயக்கங்க்ளுக்கு பின்புலமாக இருப்பார்கள் என்பதை நான் அரிதியிட்டுக் கூறிக்கொள்கின்றேன்! அரசியல் இல்லாத இலக்கியமில்லை அரசியலை நல்வழிபடுத்த சொல்லாதத்தும் இலக்கியமில்லை மக்கள் இலக்கியத்திற்கு உயிர்கொடுக்கும் சிறந்த அறிஞர்களின் தத்துவ வழிகாட்டுதல் இன்றைய காலத்தேவை
    அன்புடன் ,கவிஞர் தமிழ்பாலா--------

    பதிலளிநீக்கு
  4. அன்பார்ந்த கவிஞர் தமிழ் பாலாவுக்கு
    தங்கள் மறுமொழிக்கு நன்றி.தங்கள் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு
    என்னுடைய பதிலுரையை அடுத்த பதிவில் (இடுகை 62 ) ல் வெளியிடுகிறேன்.
    கருத்துப் பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் தொடர்ந்து வெளிப்படுத்த
    வேண்டுகிறேன்.நானும் நாவுக்கரசரின் இலக்கிய பேச்சுக்கு ரசிகன்தாம்.
    இலக்கியத்திலும் கலையிலும் எந்த நிலையிலும் ரசிகர்கள் வெளியேருவதில்லை.
    இன்றைய அரசியல் அதைச் செய்யும்.!
    பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !