வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

சிப்பாய் கலகம் ! ( அன்னா அசாரே ! ஒரு பார்வை ! )

                                                           பாண்டியன்ஜி
இந்திய தேசிய ராணுவத்திலிருந்து ஒவ்வொருமுறை விடுமுறையில் பிறந்த மண்ணுக்கு வரும்போதெல்லாம் அந்த இளைஞன் பெரிதும் மனம் புழுங்க நேரிட்டிருக்கிறது. இந்த நாடு விடுதலையுற்று பல ஆண்டுகள் போன பின்னும் கூட சொந்த கிராமத்து மக்களுக்கு இன்னும் விமோசனம் வந்து விடவில்லை. விவசாயத்தையே ஆதாரமாக கொண்ட கணிசமான மக்கள் வாழும் அந்த கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் எதுவும் தரப்படவில்லை.
வருடத்துக்கு 500 மில்லியே மழை கசியும் அந்த கிராமத்துக்கு குடிநீருக்கு கூட நெடுந்தொலைவு நடக்க வேண்டியிருந்தது. மின் இணைப்போ சுகாதாரவசதிகளோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.பிறந்த மண்ணுக்கும் சொந்த மக்களுக்கும் தன்னால் எதுவுமே செய்யமுடியாமற் போனதை எண்ணி எண்ணி தன் மீதே மிகுந்த வெறுப்பு கொள்ளுகிறான்.மேலும் மேலும் அவர்கள் சந்திக்கின்ற துயரங்களை காண சகியாமல் தற்கொலை செய்து கொள்வதைத் தவிற வேறு வழியேதும் அவனுக்கு தோன்றவில்லை.
இரண்டு பக்கங்களுக்கு மேல் தன்சாவுக்கான ஞாயங்களை எழுதி முடித்த போது அவன் தில்லி ரயில் நிலையத்தில் நின்றிருந்தான்.அப்போது அங்கே விற்பனைக்கு வைக்கப்பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரின் வீர உரை என்ற புத்தகம் அவன் கண்களில் படுகிறது.அட்டையில் வரையப்பட்டிருந்த சுவாமியின் கம்பீரத்தோற்றம் அந்த இளைஞனை பெரிதும் ஈர்க்கிறது.
அந்த கணம்தான் அவன் வாழ்க்கையில் ஒரு மகத்தான திருப்பம் நிகழ்கிறது. 
இதே புத்தகம் இன்னும் எத்தனையோ கோழைகளுக்கு போதிமரமாக இருந்திருப்பது அறிந்த ஒன்றுதான்.
இனி இந்த உடலும் உயிரும் மண்ணுக்கே என்று அப்போதே முடிவு செய்கிறான்.அன்னிய தேசங்களிடமிருந்து இந்த மண்ணைக்காப்பதைவிட சொந்த தேசத்தில் ஊறிக்கிடக்கும் சுரண்டலிலிருந்து இந்த மக்களைக் காப்பதே பொறுத்தமானது என்ற முடிவுக்கு வருகிறான்.
அவன்தான் இன்று இந்தியா முழுதும் பேசப்பட்டு உலகம்முழுதும் வியந்து பார்க்கப்பட்டு இந்திய பாராள மன்றத்தையே செயலிழக்க வைத்திருக்கிற அன்னா அசாரே .பத்து நாட்களுக்குமேலாக அவர் கொண்டிருந்த உண்ணா நோம்பு இன்னும் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருந்தாலும் சமீப காலமாக நிரம்ப பேசப்படுகிற இந்த அன்னா அசாரே யார் ?
15 சனவரி 1940
மராட்டிய மண்ணில் கல்வியறிவு அற்ற ஒரு எளிய குடும்பத்தில் இரண்டு சகோதரிகளோடு பிறந்தவர் தான்
கிசான் பப்பட் பாபுராவ் அசாரே. ( kisan bapat baburao hazare )
இயல்பாகவே முரட்டுக் குணமும் நிரம்ப மன உறுதியும் மிக்க அசாரேவுக்கு கல்வியில் நாட்டம் ஏற்படவில்லை. கல்விக்கான வசதியும் அவருக்கு அப்போது இருந்திருக்க வில்லை. அவ்ளவுதான். ஏழாம் வகுப்போடு பள்ளியைவிட்டு வெளியேறுகிறார் பாபுராவ் அசாரே..
அப்போதுதான் சீனாவுடன் நிகழ்ந்த எல்லைப்போர் முடிவுக்கு வந்திருந்தது. எல்லை தாண்டிய திமிர் ஒருவழியாக அடக்கப்பட்டிருந்தது.அப்போது..
வருங்காலத்தில் இந்திய எல்லைப்பகுதிகளை கண்காணிக்க இளைஞர்களுக்கு இந்தியஅரசு ஓர் அழைப்பு விடுக்கிறது.வேலை எதுவுமின்றி சுற்றித்திரிந்த அசாரே 1963ல் இந்திய தேசியராணுவத்தில் சேருகிறார்.
ஏறக்குறைய 15 ஆண்டுகள் இந்திய எல்லையில் பணியாற்றி அய்ந்துக்கு மேற்பட்ட புகழுரைக்கும் பதக்கங்களை பெற்றவர் அசாரே.அவருடைய பணிக்காலங்களில் பல்வேறு எல்லைச் சண்டைகளை சந்திக்க நேர்ந்திருக்கிறது.
1965 பாக்கிஸ்த்தானுடன் நிகழ்ந்த எல்லைப்போரில் வான்வழித்தாக்குதலைகூட அவர் சந்திக்க நேர்ந்திருக்கிறது.
15 ஆண்டுகள் உயிரை பணயம்வைத்து நாட்டின் எல்லையை காத்து நின்ற பாபுராவ் அசாரே 1978 ல் சொந்த மக்களின் சுகங்களுக்காக ராலேகான் சித்திக்கு ( ralegan seddhi ) விருப்ப ஓய்வு பெற்று திரும்புகிறார். தாய்மண்ணுக்கு ஆற்றுகின்ற பணிகளுக்கு தனது சொந்தவாழ்க்கை ஒருபோதும் தடையாயிருக்கக்கூடாது என்று கருதிய பாபுராவ் அசாரே வாழ்வில் திருமணத்துக்கு இடமில்லை என்று முடிவெடுக்கிறார்.
ராலேகான் சித்திக் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
அடுத்தடுத்த கிராமங்களுக்கு ஏற்பட்ட விமோசனம் இன்னும் அந்த கிராமத்துக்கு ஏற்படவில்லை.குடிக்க குடிநீர் இல்லை. வயல்வெளிகள் வெடித்துக் கிடக்கிறது.கல்விக்கூடங்கள் சுகாதார நிலையங்கள் வந்து சேரவில்லை. மின்இணைப்பு எட்டிப்பார்க்கவில்லை. இல்லை இல்லை எதுவுமே இல்லை !
தற்கொலை நினைவிலிருந்து விடுபட்ட பாபுராவ் அசாரே தம் மக்களுக்காக உயிர் வாழ உறுதி ஏற்கிறார். பல்வேறு கிராமங்களைச் சுற்றி பல்வேறு திட்டங்களை ஆய்ந்து ராலேகான் சித்திக்ல் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வெறிகரமாக நிறைவேற்றுகிறார்.காந்திஜியின் அடியொற்றி சொந்த மக்களுடன் சேர்ந்து அடுத்தடுத்து பல்வேறு திட்டங்கள்.மாநில அரசுடன் தொடர்ந்த போராட்டம்.
நிலத்தடி நீர் உயருகிறது. கால்வாய்கள் குளங்கள் வெட்டப்படுகிறது. கிடைக்கின்ற நீர் காக்கப்படுகிறது.காலப்போக்கில் 500 எக்டேருக்கு மேற்பட்ட வயல்வெளிகள் பாசனம் பெருகிறது. மின் இணைப்பு ஊருக்குள் வருகிறது. கல்விக்கூடங்கள் சுகாதார நிலையங்கள் ஏற்படுகின்றன.கிராமிய வங்கிகள் முளைக்கின்றன. சிறு தொழில் புத்துயிர் பெருகிறது.
கிஸ்சான் பப்பட் பாபுராவ் அசாரே .... அன்னா அசாரேயாகிறார்
ராலேகான் சித்திக் மக்கள அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள.இப்போது இந்த தேசமே அப்படித்தான் பேசுகிறது.ராலேகான் சித்திக் இந்த தேசத்தின் பிறபகுதிகளுக்கு ஒரு காட்சிப் பொருளாகிறது.
இருந்தும் அசாரே ஒயவில்லை.
மாநில அரசோடு தொடர்ந்து போராட்டம் சத்யாகிரகம்.
ஒரு கட்டத்தில் அரசு நிர்வாகத்தால் மிரட்டல் மன்னன் என்றுகூட அழைக்கப்படுகிறார் அசாரே.பரவிக்கிடக்கும் ஊழல் இந்த தேசத்தை பல்வேறு வழிகளில் சுரண்டிக்கொழுக்கிறது.நாட்டின் வளர்ச்சிக்கு தலையாய தடையாக இருப்பது ஊழல்தான் என்பதை உணர்கிறார் அசாரே. சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் ஊறிக்கிடப்பதை அறிகிறார். 1991 ல் அசாரே ஊழலுக்கு எதிரான ஒரு மக்கள் இயக்கத்தை துவக்குகிறார்.
உழலுக்கு எதிரான தொடர்ந்த போராட்டத்தில் மாநில அரசு 300க்கு மேற்பட்ட காட்டிலாக்கா ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப நேருகிறது.இரண்டு அமச்சர்களும் பதவி இழக்கின்றனர்.
1997 ல் ஊழலை அகற்ற துருப்புச்சீட்டாக தேவையான தகவல் அறியும் சட்டத்தை கொணர தனது போராட்டத்தை துவக்குகிறார் அசாரே. ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு மேலாக போராடி இன்று இந்த தேசமே துய்க்கிற தகவல் அறியும் சட்டத்தை பெற்றுத்தருகிறார் அன்னா அசாரே.இந்த மாபெரும் போராட்டத்தில் முன்னதாக பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி வழங்கிய பத்மபூஷன் போன்ற விருதுகளைக்கூட திருப்பியளித்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அன்னா அசாரே.
அடுத்த கட்டமாக 40 ஆண்டுகளுக்கு மேலாக பாராளமன்றத்தில் எட்டு முறை தாக்கல் செய்யப்பட்டு இப்போது கேட்பாரற்று கிடக்கும் லோக் பால் மசோதாவை தூசி தட்டி எடுக்கிறார் அன்னா அசாரே.பெருகிக்கிடக்கும் ஊழலை ஒழிக்க இதுபோன்ற லோக்பால் பயனற்றது என்றுணர்ந்த அசாரே அரசையும் மக்களையும் இணைத்து புதிய ஜன்லோக்பால் வரைவை தன் குழுவினருடன் இணைந்து உருவாக்குகிறார்.நாட்டின் உயர்ந்த பதவியிலிருக்கும் பிரதமர் , உச்சநீதிமன்ற நீதிபதி முதல் கடைசி அரசு ஊழியர்வரை ஜன் லோக்பால் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தை சட்டமாக்க வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 6 லிருந்து பத்து நாட்களுக்கு மேலாக தில்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணா நோம்பு இருந்து வருகிறார்.அவரது கோரிக்கைகளுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிஅரசுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த மண்ணில் அநீதிகளும் அக்ரமங்களும் எல்லை மீறி போகும் ஒவ்வொரு சமயத்திலும் இயற்கையாகவோ செயற்கையாகவோ மிகப்பெரிய எழுச்சியொன்று ஏற்படுவதை கண்டிருக்கிறேன் .அது போன்ற தருணங்களை
நாம்தான் சரியான வழியில் பயன்படுத்த மறந்திருக்கிறோம் என்றே கருதுகிறேன்.
அதேபோல் நாடு தழுவிய  ஊழலுக்கெதிரான மாபெரும் இந்த எழுச்சி கிடைப்பதர்க்கறியது.அதை இந்த அரசும் மக்களும் எப்படி சந்திக்கப்போகிறார்கள் என்பதே இப்போது எழுந்துள்ள தலையாய பிரச்சனை.
கல்வியில் வெரும் ஏழாம் வகுப்பைமட்டுமே எட்டி கடிவாளம் அணிந்த குதிரைகளைப்போல மாற்றுச்சிந்தனைகளுக்குஇடமின்றி 15 ஆண்டுகள் இந்திய எல்லையில் முறட்டு வாழ்க்கை வாழ்ந்த அசாரே விருப்ப
ஓய்வில் வீடு திரும்பும் போது அண்ணல் அசாரேவாக திரும்புகிறார். 
வன்முறையை விலக்கி சாத்வீகத்தில் பிரவேசிக்க எப்படி சாத்யமாயிற்று. 
அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்த்திய போராட்டங்கள் அத்தனையுமே வன்முறையற்றவை. ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்று தேசப்பிதா நமக்களித்த கூரிய ஆயுதம் இன்னும் முனை மழுங்கவில்லை என்று நிரூபித்தவர் அசாரே. நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல பள்ளிப்படிப்பில் ஏழாம் வகுப்பைக்கூட எட்டாத அன்னா அசாரே இந்தியராணுவத்தில் ஒரு சிப்பாயாக வாழ்வைத் துவக்கி இன்று இந்திய துணைகண்டத்தில் ஊழலற்ற ஓரு சமுதாயத்தை உருவாக்க துவக்கியிருக்கும் இந்த சிப்பாய் ( soldier ) கலகம் இந்த மண்ணுக்கு பயனளிக்கட்டும். 
.................................................
அசாரேயின் ஜன்லோக்பால் இப்போது அரசுக்கு ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.பல்வேறு கட்சிகளையும் தனக்கென தனியொரு சட்டதிட்ங்களையும் பெற்றிருக்கிற இந்திய பாராளமன்றம் தனிப்பட்ட எந்த குரலுக்கும் பணிந்துவிட முடியாது.அவை அனைத்தும் அமர்ந்து பேசப்படவேண்டும். அன்னா அசாரே உண்ணாநோம்பை கைவிட்டு அரசுடன் ஒத்துழைத்தால் இந்த தேசத்துக்கே நல்ல வழி பிறக்கும் . 
இடுகை 0068 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !