புதன், மார்ச் 25, 2015

பெண்கள் சமையல் செய்யக் கூடாது!

ஆணாதிக்கம் !
தந்தை பெரியார்
தாய்மார்களே! பெரியோர்களே! மண மக்களின் பெற்றோர்களே! தோழர்களே!
இந்நிகழ்ச்சியானது இதுவரை நம்மில் கல்யாணம் - விவாகம் - முகூர்த்தம் என்னும் பெயரால் நடைபெற்றுப் பெண்களை ஆண்களின் அடிமைகளாகவும், சொத்துகளாகவும் ஆக்கப்பட்டு வந்திருக்கிறது.
periyar 342பிறகுதான் பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். ஆண்களும் பகுத்தறிவு பெற்றுச் சிறந்த வாழ்வு வாழ வேண்டுமெனக் கருதிப் பழைய முறையினை மாற்றி, வாழ்க்கை ஒப்பந்த விழா என்னும் பெயரால் இம்முறையினைத் தோற்றுவித்து இதன்படி நடத்திக் கொண்டு வருகின்றோம். இம்முறையானது கடவுள், மத, சாஸ்திரங்களின் மீதுள்ள வெறுப்பாலோ, சிறுபான்மையாக இருக்கும் மேல்ஜாதிக்காரர்களான பார்ப்பனர்களின் மீது வெறுப்புக் கொண்டோ இந்த நிகழ்ச்சி முறை செய்யப்படுவது கிடையாது. சிலர் பார்ப்பனர்களின் மீது கொண்ட துவேஷத்தால் இது துவக்கப்பட்டது என்று நினைத்துப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அது தவறான பிரசாரமாகும்.
இது பெண்களின் விடுதலையைக் கருதியே ஏற்பாடு செய்து துவக்கப்பட்டதாகும்.
இந்நிகழ்ச்சிக்குச் சுயமரியாதைத் திருமணம் என்று பெயர் வரவேண்டிய அவசியம் என்னவென்றால், இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், மான உணர்ச்சி, சமத்துவம் அளிக்கப்படுகின்றன. ஆண்களுக்குப் பகுத்தறிவு இல்லை. இதன் மூலம் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அறிவைப் பயன்படுத்தாமலிருப்பதற்குக் காரணம் மானம், மரியாதை இல்லாதது தான். அதுபோலவே பெண்களும் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று அறிவற்று மானம் மரியாதையற்றிருந்தார்கள். இந்த இருபாலரிடமும் இருந்து வந்த அறிவற்ற தன்மை - மானம் மரியாதை அற்ற தன்மையை நீக்குவதால் தான் இந்நிகழ்ச்சியை சுயமரியாதைத் திருமணம் என்கிறோம்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறியால் தான் வித்தியாசமே தவிர, மற்றப்படி அறிவு, வலிவு, பிறப்பு இவற்றில் எல்லாம் இருவரும் சமமானவர்களே ஆவார்கள். மனித சமுதாயத்தில் சோறு சமைப்பதற்கும், வீட்டு வேலைகளை செய்வதற்கும், குட்டி போடுவதற்கும், தன் புருஷனுக்கு அடிமையாக இருந்து ஏவல் செய்வதற்கும், என்றாக்கி அவர்களைக் கல்வி கற்காமலும் வைப்பதே இதுவரை இருந்த முறைகளாகும்.
இந்நிகழ்ச்சியானது இதுவரை சட்ட சம்மதமில்லாத நிகழ்ச்சியாக இருந்து வந்தது என்றாலும், மக்களிடையே பல்லாயிரக்கணக்கில் நடைபெற்று வந்து கொண்டுதானிருந்தது. இவற்றில் சில வழக்கு மன்றங்கள் சென்று இது செல்லுபடியாகாத திருமணம் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்ட போதும், மக்கள் அதனைப் பற்றி இலட்சியம் செய்யாமல் பலப்பல திருமணங்களை இம்முறையில் நடத்தியே வந்திருக்கின்றனர். இப்போது அமைந்துள்ள (தி.மு.க) ஆட்சியானது மக்கள் ஆட்சியானதாலும், பகுத்தறிவாளர்கள் ஆட்சியானதாலும் இம்முறையைச் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டம் செய்து விட்டார்கள்.
இதற்கு முன்னும் இதுபோன்ற முறையில் தான் அரசாங்கத்தால் பதிவுத் திருமணம் என்கிற பெயரால் திருமணம் நடந்து கொண்டிருந்தது. பதிவுத் திருமணத்தில் திருமணம் செய்து கொள்கிற ஆணும், பெண்ணும் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் போய், 'நான் இவரை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன்' என்று பெண்ணும், 'நான் இப்பெண்ணை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்' என்று ஆணும் உறுதி கூறிக் கையொப்பமிடுவார்கள். இம்முறையாவது கணவன், மனைவி என்பதை வலியுறுத்தக் கூடியதே ஆகும்.
ஆனால், நாம் செய்கின்ற இம்முறையில் கணவன் - மனைவி என்பது கிடையாது. இருவருக்கும் சமஅந்தஸ்துள்ள நண்பர்கள் என்பதை வலியுறுத்துகிறோம். இதில் ஒருவருக்கொருவர் அடிமை என்கின்ற தன்மை இல்லை.
நான் பொதுத் தொண்டையே முக்கியமாகக் கருதுபவன் ஆனதனாலே, நம் மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்பவன் ஆனதனாலே, பழைமைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் ஆனதனாலே என் கண் முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு, அதன்படி மனிதன் முன்னேற வேண்டுமென்று நினைப்பவனாவேன்.
புலவர் அவர்கள் நேற்று, சுமார் அய்ந்து ஆண்டுகளுக்கு முன் நம் கண் முன்னிருந்த பாரதிதாசன் அவர்களின் கதையை எடுத்துக் கூறினார்கள். அதைக் கேட்கும்போது எனக்கே மிக ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு தெளிவாக உண்மையை எடுத்துக் கூறி இருக்கிறார். நமக்கு என்னென்ன தேவை என்பதை எடுத்து விளக்கி இருக்கிறார். இதையெல்லாம் நம் மக்கள் படித்துத் தெளிவடைய வேண்டும். நம் உண்மை நிலையை உணர வேண்டும், திருந்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைக்கு நமக்கு என்ன வேண்டுமென்பது வள்ளுவனுக்கு எப்படித் தெரியும்? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே இருந்தவனுக்கு மனிதன் எப்படி ஆவான் என்பது எப்படித் தெரியும்?
அதற்கு முன் பெண்களைப் பார்த்தாலே அவள் அணிந்திருக்கும் நகை - உடைகளை வைத்து, அவள் எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்று சொல்ல முடியும். இப்போது யாரைப் பார்த்தாலும் ஒன்றாகவே தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு வளர்ச்சியடைந்து விட்டது.
தாலி எதற்காகக் கட்டப்படுகிறது என்பதை நம் பெண்கள் இன்னும் உணரவில்லை. ராஜா மனைவியாக இருந்தாலும், பெரிய ஜமீன்தார் மனைவி - பணக்காரர் மனைவி என யாராக இருந்தாலும், அவன் செத்தவுடன் அறுப்பதற்காகத் தானே அந்தப் பெண்ணை முண்டச்சியாக்கத் தானே பயன்படுகிறது. வேறு எதற்குத் தாலி பயன்படுகிறது?
100-வருடங்களுக்கு முன் வரை உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. அது மதப்படி ஒரு சடங்காகச் செய்யப்பட்டு வந்தது. வெள்ளைக்காரன் வந்து அது கொலைக் குற்றம் என்று ஆக்கியபின் தான் நின்றது. இப்போது என்ன சொல்கிறோம், இப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலமா இருந்தது? என்று எண்ணுகின்றோம், ஆச்சரியப்படுகின்றோம். அதுபோல் தான் நாளைக்கு வரும் பெண்கள் நினைப்பார்கள். பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கூடவா இருந்தது என்று!
நாட்டிலே காட்டுமிராண்டித் தன்மைகள், கொடுமைகள் நிறைந்து விட்டன. பார்ப்பான் வந்தான், அவன் யோசனை சொல்பவனாக ஆகிவிட்டான்.
பெண்கள் ஆண்களின் சொத்துகள். அவன் சொல்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றும் ஆக்கி விட்டான். நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான். கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இதுபோன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத்திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.
இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடியவில்லை. மகா அயோக்கியன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது!
அந்தக் காலத்து முட்டாள் கதை எழுதினான் என்றால், இந்தக் காலத்து முட்டாள் அவற்றுக்குச் சிலை வைக்கிறான்.
இந்த நாடு - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விலகாமல் மக்களைச் சிந்திக்க விடாமல் பாதுகாத்து, முட்டாள்களாக்கவே பாடுபடுகின்றார்கள். அதனால் தான் நம் நாடு இன்னமும் முன்னேற்றமடையாமல் காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. தமிழன் பண்பாடு - தமிழின நன்மை - தமிழின வாழ்வு என்று போனால், இன்னும் 2,000 ஆண்டுகளுக்குப் பின் தானே செல்வோம். ஓர் அடி கூட முன்னே செல்ல முடியாதே!
தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண்களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? ஆறறிவுள்ள மனிதனுக்கு இதுதானா பயன்? பெரிய குறை - பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததே யாகும். பெண்கள் படித்தாலே கெட்டு விடுவார்கள் என்று ஒரு தவறான கருத்தே நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்தது. எதுவரை இருந்தது என்றால், வெள்ளைக்காரன் வந்து 150-வருடம் வரை நம்மை ஆட்சி செய்தும், பெண்கள் படிக்கவேயில்லை. 30, 40-ஆண்டுகளுக்கு முன்பு நம் உணர்ச்சி கிளம்பிய பிறகுதான் பெண்கள் படிக்கவே ஆரம்பித்தனர்.
பெண்கள் உருப்படியாக வேண்டுமானால், இத்திருமண முறையையே உடன்கட்டை ஏறுதல் போல் சட்டம் கிரிமினல் குற்றமாக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்று சமுதாயத்திற்குப் பயன்பட முடியும்.
இப்போது அரசாங்கத்தில் பெண்களின் திருமண வயது வரம்பை 21-க்கு உயர்த்திச் சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், 21-வயதில் திருமணம் செய்தால் மூன்று குழந்தைகள் குறையும் என்பதாகும். நாம் சொல்வது அது மட்டுமல்ல, பெண்கள் அந்த வயதுக்குள் நல்ல கல்வி கற்று, தாங்களே உத்தியோகம், தொழில் செய்யும் அளவுக்கு அறிவு பெற்று விடுவர். அதன் பின் தனக்குத் தேவையான ஒத்த உரிமையுள்ள, தனக்கு ஏற்ற துணைவனைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் பெற்று விடுவார்கள் என்பதுதான்.
தாய்மார்கள் தங்கள் பெண்களை நிறையப் படிக்க வைக்க வேண்டும். அதோடு ஒரு தொழிலையும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை நடத்தக் கூடிய வருவாய் கிடைக்கும்படியான நிலைமை பெற வேண்டும். பெண்கள் கெட்டுப் போவார்கள் என்ற எண்ணமே பெற்றோர்களுக்கு இருக்கக் கூடாது.
பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டாரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளிநாடுகளில் எல்லாம் அப்படித்தான்! ஆணும், பெண்ணும் தங்கள் தங்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். தங்குவதற்கு ஒரு அறையையே வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். அதற்குள் ஒரு பீரோ, கட்டில், இரண்டு நாற்காலிகள் இவை தான் இருக்கும். பொதுவான குளியலறையும் - கக்கூசும் இருக்கும். இரவு தூங்குவார்கள். தேவைக்குப் பொது குளியலறை கக்கூசைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் ருசியான உணவு கிடைக்கிறது; வீட்டு வாடகை குறைகிறது; நேரம் மிச்சமாகிறது; உணவிற்காகச் செலவிடும் பணமும் குறைகிறது.
இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுலபமானதாகும்.
நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.
மனிதன் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் ஆனதோடு - திருமணங்கள் மதத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால், கடவுளோடு சம்பந்தப்படுத்தி விட்டதால் இதனைவிட துணிவின்றி பின்பற்றிக் கொண்டிருகின்றார்.
வாழ்த்துவது என்பது ஒரு சம்பிரதாயப் பழக்கம் என்பதைத் தவிர, இதில் எந்தப் பொருளோ, பலனோ இல்லை. வசைமொழிகளுக்கு என்ன பலனோ அதே பலன்தான் இதற்கும் என்பதை உணர வேண்டும். அறிவோடு - சிக்கனமாக வாழ வேண்டும். வரவிற்கு மேல் செலவிட்டுப் பிறர் கையை எதிர்பார்ப்பதும், ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு இடம் கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டு, கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.
இறுதியாகக் குழந்தைகள் அதிகம் பெறுவது பெரும் கேடாகும். இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு அரசாங்கமே இதனை உணர்ந்து, பல திட்டங்களைப் போட்டு அதிகக் குழந்தைகள் பெறாமல் தடுக்க மருத்துவ வசதிகள் செய்திருக்கின்றது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகக் குழந்தைகள் பெறுவதுதான் அவன் தன்னையும் தியாகம் செய்து, தனது மனைவியையும் தியாகம் செய்து ஒழுக்கக் கேடான காரியங்களிலும் ஈடுபடச் செய்கிறது. ஓரளவாவது சுதந்திரத்தோடு, பிறர் கையை எதிர்பார்க்காமல், கவலையற்று வாழ வேண்டுமானால் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது.
இதைவிட இன்னும் பகுத்தறிவாளர்கள் ஆட்சி வந்தால், அரசாங்கமே குழந்தை வளர்ப்தைத் தானே ஏற்றுக் கொள்ளும். ரஷ்யா போன்ற நாடுகளில் அரசாங்கமே குழந்தைகளை வளர்க்கின்றன. நல்ல சுகாதாரத்தோடு 15-வயது வரை வளர்கின்றன.
நான் போய்க் குழந்தைகள் விடுதியைப் பார்க்கப் போன போது, எனது காலில் இருந்த பூட்சைக் கழற்றி விட்டு, அவர்கள் ஒரு பூட்சு கொடுத்தார்கள். என் உடையின் மேல் ஓர் அங்கியை அணிவித்தார்கள். கைகளுக்கு உறை மாட்டினார்கள்.
அதன் பின்தான் விடுதிக்குள் அனுமதித்தார்கள். உள்ளே போனதும் குழந்தைகளைத் தொடக் கூடாது. பார்த்துச் சிரிக்கலாம் என்று சொன்னார்கள். எனக்கு மட்டுமல்ல, குழந்தைகளின் தாய், தகப்பனாக இருந்தாலும் இப்படித்தான்! இதனால் நோய்க் கிருமிகள் குழந்தைகளுக்குப் பரவாமல் தடுக்கின்றனர்.
தாய், தகப்பனை விட விஞ்ஞானத்தோடு குழந்தைகளை வளர்க்கின்றனர். அதனால் மக்கள் கவலையற்ற வாழ்வு வாழ்கின்றனர்.
நம்மால் குழந்தைகளை அவ்வளவு நல்ல முறையில் வளர்க்க முடியாது. அவ்வளவு ஆரோக்கியத்தோடு வளர்க்கின்றார்கள்.
மேலும் மணமக்கள் மூட நம்பிக்கையான கோயில் - குளம் - பண்டிகை - உற்சவம் இவற்றுக்குச் செல்லக் கூடாது. மிருக உணர்ச்சியைத் தூண்டும் சினிமாவிற்குச் செல்லக் கூடாது. வேண்டுமானால், கண்காட்சிகளுக்குச் சென்று பெரிய பெரிய இயந்திரங்கள் வேலை செய்யும் நெய்வேலி போன்ற நகரங்களுக்குச் சென்று அவை எப்படி வேலை செய்கின்றன என்பதையெல்லாம் பார்த்துத் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
-------------------------
09.02.1968 அன்று தஞ்சை - லால்குடி வாழ்க்கை ஒப்பந்த விழாக்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 20.02.1968
நன்றி !     கீற்று இணையிதழில்   -  தமிழ்ஓவியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !